Tamilnadu

Chess Olympiad : இந்திய ஓபன் 'B' அணியை வெற்றிபெற செய்த தமிழக வீரர் பிரக்ஞானந்தா !

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடர் சென்னை மாமல்லபுரத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டித்தொடரின் 9-வது சுற்று நேற்று நடைபெற்றது.

இதில் இந்திய ஓபன் 'ஏ' அணி, பிரேசில் அணியை எதிர்கொண்டது. இதில் போட்டியிட்ட ஹரி கிருஷ்ணா மற்றும் விதித் சந்தோஷ் டிரா செய்தனர். மேலும் தமிழ்நாட்டு வீரர் சசி கிரண் மற்றும் அர்ஜூன் தனது போட்டியாளர்களை வீழ்த்தியதன் மூலம் 3-1 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய 'ஏ' அணிக்கு வெற்றியை ஈட்டினர்.

தொடர்ந்து இந்திய ஓபன் 'பி' அணி, அஜர்பைஜான் அணியுடன் மோதியது. இதில் சத்வானி தோல்வியைத் தழுவிய நிலையில், குகேஷ் மற்றும் நிஹல் சரின் டிராவை சந்தித்தனர். இதனால் பிரக்ஞானந்தா வெற்றிபெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். அப்போது தனது நேர்த்தியான யுக்தியை பயன்படுத்தி 66-வது நகர்தலில் அஜர்பைஜான் வீரர் துரார்பெய்லி வாசிப்பை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

இந்திய ஓபன் 'சி' அணி, பராகுவே அணியுடன் போட்டியிட்டது. இதில், சூர்ய சேகர் தோல்வியை சந்தித்த போதும், சேதுராமன், கார்த்திகேயன் மற்றும் அபிமன்யு ஆகியோர் வெற்றிபெற்று தங்களது அணிக்கு வலு சேர்த்தனர்.

மேலும் இந்திய மகளிர் 'ஏ' அணி, போலாந்து அணியுடன் மோதியது. இதில் கொனேரு ஹம்பி, ஹரிகா மற்றும் தான்யா ஆகியோர் டிரா செய்தனர். இதனால் பிரக்ஞானந்தாவின் சகோதரியான வைஷாலி வெற்றிபெறும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

கடைசி கட்டத்தில் கடுமையாக முயற்சித்தும், வைஷாலியை போலந்து வீராங்கனை ஒலிவியா, 80-வது நகர்தலில் தோல்வியடைய செய்து வெற்றி பெற்றார். இதனால் இந்திய மகளிர் 'ஏ' அணி, தனது முதல் தோல்வியை சந்தித்தது.

Also Read: கிரிக்கெட் மட்டையால் கணவர் கொலை.. மகனை மாட்டி விட்ட கொடூர தாய்.. வெளியான அதிர்ச்சி காரணம் !