Tamilnadu
"தகைசால் தமிழர்” விருது.. ஆர்.நல்லகண்ணு தேர்வு : தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
தி.மு.க அரசு பொறுப்பேற்ற பிறகு, தமிழ் இனத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும்விதமாக ‘தகைசால் தமிழர்’ என்ற பெயரில் புதிய விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கினார்.
தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் “தகைசால் தமிழர்” என்ற பெயரில் புதிய விருது 2021 – ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டிற்கான விருதாளரை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, விடுதலைப் போராட்ட வீரராக தன் இளம் வயதை சிறைச்சாலையிலும், தலைமறைவு வாழ்க்கையிலும், கழித்தவரும்,
ஏழை எளிய மக்களுக்காக குரல்கொடுத்து, சமூக நல்லிணக்கத்தினையும், சுற்றுச்சூழலையும் காத்திட தொடர்ந்து பாடுபட்டுவருவதுடன், சிறந்த தன்னலமற்ற அரசியல்வாதியாகவும் பணியாற்றி, தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்களிப்பை அளித்த தமிழருமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு அவர்களுக்கு 2022-ஆம் ஆண்டிற்கான “தகைசால் தமிழர் விருது" வழங்க தேர்வுக் குழுவினரால் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
“தகைசால் தமிழர்” விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர். நல்லகண்ணு அவர்களுக்கு, பத்து இலட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், வருகிற 2022 ஆகஸ்ட் திங்கள் 15-ஆம் நாள் நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர்.மு. க. ஸ்டாலின் வழங்குகிறார்.
கடந்த ஆண்டு சுதந்திரபோராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான என். சங்கரய்யாவுக்கு “தகைசால் தமிழர்” விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
மிரட்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் : ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைக்கும் பா.ஜ.க அரசு திட்டம்!
-
கொழுந்து விட்டு எரிந்த சொகுசு பேருந்து : 25 பேர் பலி - ஆந்திராவில் நடந்த துயர சம்பவம்!
-
மனப்பாடம் செய்து படித்தாலும் தமிழ்நாட்டில் பழனிசாமி Failதான் ஆவார் : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
-
“A Sun from the south” : நூலினை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சர்வதேச போட்டியில் பங்கேற்கும் 33 வீரர்கள் : ரூ.43.20 லட்சம் நிதியுதவி வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!