Tamilnadu

தமிழ்நாட்டு போலிஸார் விசாரணைக்கு பயந்து தலைமறைவான புதுச்சேரி MLA மகன்: நடந்தது என்ன?

புதுச்சேரி அடுத்த செல்லிப்பட்டை பகுதியைச் சேர்ந்தவர் அங்காளன். சுயேட்சை சட்டமன்ற உறுப்பினரான இவர் பா.ஜ.க கட்சிக்கு ஆதரவு கொடுத்துள்ளார். இவரது மகன் திலகரசர். இவர் தனியார் பேருந்து பரிசோதகராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கடந்த 4ம் தேதியிலிருந்து திலகர் மாயமாகியுள்ளார். இதனால் மகன் குறித்து எம்.எல்.ஏ அங்காளன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் படி போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது திலகரசர் இரண்டு முறை பேருந்தை எடுத்து ஓட்டியுள்ளார். அப்போது கலித்திரம்பட்டு பகுதியில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சிலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.

பின்னர், பாதிக்கப்பட்டவர்கள் இது குறித்து புதுச்சேரி மேற்கு போக்குவரத்து போலிஸாரிடம் புகார் அளித்தனர். ஆனால் இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த அங்காளன் போலிஸாரிம் பேசி மகன் மீது வழக்குப் பதிவு செய்யாமல் பார்த்துக் கொண்டார்.

இதையடுத்து விபத்து ஏற்பட்ட பகுதி தமிழ்நாட்டு எல்லை என்பதால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டமங்கலம் காவல் நிலையதில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை அடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்த முயன்றபோது திலகரசர் தலைமறைவானது தெரியவந்தது.

பின்னர் இருமாநில போலிஸாரும் தலைமறைவாக உள்ள திலகரை தேடிவருகின்றனர். போலிஸ் விசாரணைக்குப் பயந்து எம்.எல்.ஏ மகன் தலைமறைவாக உள்ளது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: இருசக்கர வாகனத்தின் சாவியை தர மறுத்த மகன்.. கோடாரி கொண்டு தந்தை செய்த வெறிச்செயல் !