Tamilnadu

மாணவர்களுக்குக் கல்விக் கட்டணத்திலிருந்து விலக்கு.. பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவு யாருக்குப் பொருந்தும்!

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகலாக கொரோனா தொற்றின்போது பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் பலர் தொற்று பாதித்து உயிரிழந்தனர். இதனால் பள்ளி மாணவர்களின் கல்வி தொடர்வதில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா தொற்றால் உயிரிழந்த பெற்றோர்களின் பிள்ளைகள் கல்வி தொடர அவர்களது பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி நிரந்தர வைப்பு நிதி வைக்கப்படும் என அரசு அறிவித்தது.

இந்நிலையில், கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த தனியார் பள்ளி மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார், அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு இறந்த பெற்றோர்களின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் கல்வி பயின்று கொண்டு இருப்பின் அவர்களுக்குக் கல்விக் கட்டணம் பெறுவதிலிருந்து விலக்களித்து, தொடர்ந்து அவர்கள் அதே பள்ளியில் கல்வி பயில்வதை உறுதி செய்தல் வேண்டும்.

தனியார் பள்ளிகள் இந்த கல்வியாண்டிற்கான கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்வதற்குக் கருத்துருவினை உடனடியாக தனியார் பள்ளிக் கட்டண நிர்ணயக் குழுவிற்கு அனுப்பிடல் வேண்டும். அனைத்துப்பள்ளிகளும் கருத்துரு அனுப்பியதை உறுதிப்படுத்திடவும், அதனைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: ”ஒன்றிய அரசுக்கு விசுவாசத்தை காட்ட மக்களிடம் வாங்கிக் கட்டிக்கொள்ளும் ஆளுநர்கள்”: முரசொலி கட்டுரை!