Tamilnadu
கள்ளக்குறிச்சி விவகாரம்: 63யூடியூப், 31ட்விட்டர், 27முகநூல் கணக்குகள் முடக்கம் - அதிரடி காட்டிய போலிஸ் !
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டம் கலவரமாக மாறியதில், அந்த பள்ளியிலுள்ள பென்ச், சேர் உள்ளிட்ட பொருட்கள் சூறையாடபட்டது.
இதனால் அந்த போராட்டம் வன்முறையாக மாறியது. மேலும் பள்ளி வாகனத்திற்கு தீ வைத்ததோடு காவல்துறை வாகனத்தை கவிழ்க்க போராட்டக்காரர்கள் முயற்சித்தனர். பின்னர் இந்த போராட்டம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இதையடுத்து இந்த வன்முறையை கட்டுப்படுத்த அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர், தனியார் பள்ளியின் முதல்வர், தாளாளர், செயலாளரும் கைது செய்யப்பட்டதோடு, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் டி.ஜி.பி உத்தரவிட்டார். அதோடு இந்த வன்முறையில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இந்த வன்முறையில் ஈடுபட்ட அனைத்து கலவரக்காரர்களையும் கைது செய்வதற்காக காவல்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு, சமூக வலைதளங்களில் இந்த விவகாரத்தில் போலியான தகவல்களை பரப்புவதாக சிலரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அதுமட்டுமின்றி ஏற்கனவே இந்த கலவரம் தொடர்பாக டி.ஜி.பி., தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், கூடுதலாக எஸ்.ஐ.க்கள் உட்பட 56 காவல் அதிகாரிகளை நியமித்து டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதனிடையே மாணவி மரண வழக்கு தொடர்பாக வதந்திகளை பரப்பியதாக பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், "டி.ஐ.ஜி தலைமையில் கூடுதல் எஸ்.பி.க்கள், டி.எஸ்.பி.க்கள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு இந்த கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தியது. கலவரத்தின் போது வதந்தி பரப்பிய 63 யூடியூப் இணையதளங்கள், 31 ட்விட்டர் கணக்குகள், 27 முகநூல் பக்கங்கள் ஆகியவற்றில் உள்ள பதிவுகளை நீக்கும்படி சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மாணவி மரணம் தொடர்பான விசாரணையும் பள்ளியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான விசாரணையும் தனித்தனியாக நடந்து வருகிறது. இது தவிர பள்ளியின் தாளாளர் மீது ஏற்கனவே உள்ள ஒரு வழக்கு தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகிறோம்.
எனவே கள்ளக்குறிச்சி பள்ளி மரண வழக்கில் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. யாரையும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் காவல்துறைக்கு இல்லை. தமிழ்நாடு முதல்வரின் அறிவுரையை ஏற்று, 27ம் தேதி முதல் கனியாமூர் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டது.
Also Read
-
உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு... தஞ்சையில் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்த தொண்டர்கள் !
-
“கைதுக்கு பயமில்லை... எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பேன்” – கெத்தாக பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்!
-
உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனத்திற்குரியது.. தவெக அரசு அராஜகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
-
தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பு : வரம்பு மீறிய காவல்துறை... நீதிமன்றத்தில் உதயநிதி தரப்பு வாதம்!