Tamilnadu
“அரசியல் சதுரங்கத்தின் சாம்பியன் தி.மு.க..” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சின் Decode!
தமிழ்நாட்டின் புகழை சர்வதேச அளவிற்கு மீண்டுமொரு முறை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 44-வது போட்டி செஸ் ஒலிம்பியாட்டின், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் 187 நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்டவர்கள் பங்குபெறுகின்றனர். இந்த போட்டி தொடரில் பங்கேற்க வரும் வீரர்கள், வீராங்கனைகள் தங்குவதற்காக சென்னை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் ஓட்டல்கள், விடுதிகளை தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது. மேலும் எங்கு திரும்பினாலும், இந்த போட்டியின் லோகோவான வேட்டி - சட்டையுடன் கூடிய செஸ் விளையாட்டில் பயன்படுத்தும் குதிரை காய் வணக்கம் தெரிவிப்பதுபோல, தம்பி சின்னங்கள் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியின் தொடக்க விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் தொடக்கத்தில், இந்தியா பன்முகத்தன்மை கொண்டது என்பதை நிரூபிக்கும் வகையில், நாட்டின் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த நடனக்கலைஞர்கள் பாரம்பரிய நடனத்தை நடமாடி போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர்.
மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொண்டுள்ள 187 நாட்டு வீரர்களும், தங்கள் நாட்டுத் தேசியக் கொடிகளைக் கையில் ஏந்திக் கொண்டு கம்பீரமாக வலம் வந்தனர்.
இந்திய அணி வீரர்கள் மூவர்ணக்கொடியுடன் வந்தபோது அரங்கிலிருந்த அனைவரும் கைதட்டி அவர்களை வரவேற்றனர். அதேபோல் நாட்டின் பன்முகத்தன்மையை எதிரொலிக்கும் விதமாக நாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
தொடக்கவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தமிழ், தமிழர் பெருமை குறித்த வரலாற்றை விளக்கும் 3D நிகழ்ச்சியில், தமிழ் மொழி, தமிழர்களின் தொன்மை, பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையில் பாரம்பரிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனைவிட முக்கிய அம்சமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு அமைந்திருந்தது. தொடக்க நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செஸ் போட்டியை எப்படியாவது தமிழ்நாட்டில் நடத்திடவேண்டும் என அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதை விளக்கினார். முன்னதாக பலரும் ஏன் குதிரைக்கு, ’வேட்டை சட்டை அணிந்து-தம்பி’ என கேள்வி எழுப்பி வந்தனர்.
அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் பேசிய முதலமைச்சர், “'நைட்' போலவே ஒரு குதிரை வடிவமைக்கப்பட்டு அது வணக்கம் சொல்லும் வகையில் இலட்சினை வெளியிடப்பட்டது. தமிழர்களின் அடையாளமான வேட்டி - சட்டை அணிந்து அந்தக் குதிரை வடிவமைக்கப்பட்டது. அதற்கு 'தம்பி' என்ற பெயரைச் சூட்டினோம்.
'தம்பி' என்பது சகோதரத்தின் அடையாளம். நான் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்பதன் அடையாளம் ஆகும். தமிழ்நாட்டின் தனிப்பெரும் தலைவரான பேரறிஞர் அண்ணா அவர்கள் அனைவரையும் 'தம்பி' என்று தான் அழைத்தார். அந்த அன்புச் சொல்லைக் கொண்டதாக இந்த சின்னம் வடிவமைக்கப்பட்டது.” எனத் தெரிவித்தார்.
மேலும் சதுரங்கத்தின் பிறப்பிடமே தமிழ்நாடு தான் என வரலாற்று ஆய்வுகள் தெள்ளத்தெளிவாக விளக்கியுள்ளது. அதனை நிரூபிக்கும் வகையில் கீழடியில் சதுரங்க ஆட்டக்காய்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஓர் அரசன், ஓர் அரசி, இரு அமைச்சர்கள், இரு குதிரைகள், இரு கோட்டைகள் மற்றும் எட்டுச் சிப்பாய்கள் என கருப்பு - வெள்ளை ராணுவ மைதானமாகவே காட்சி அளிப்பது சதுரங்கம்.
கீழடியைப் பற்றி நான் அதிகம் விளக்க வேண்டியது இல்லை. பல்லாயிரம் ஆண்டுப் பழமையைக் கொண்ட தமிழினம் வாழ்ந்த அடையாளம் கொண்ட பகுதியாக கீழடி நமக்கு வரலாறு சொல்லிக் கொண்டு இருக்கிறது.
கீழடியில் ஏராளமான பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அங்கு இரண்டு வகையான ஆட்டக்காய்கள் கிடைத்துள்ளன. தந்தத்தினால் ஆன காய்கள் இவை. இவ்வகையான பொருட்கள், சதுரங்கம் போன்ற விளையாட்டுகளை விளையாடப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இவை அனைத்தும் சுடுமண்ணால் சுடப்பட்டு பெரும்பாலும் கருப்பு நிறம் கொண்டவையாக உள்ளன. குழந்தைகள் விளையாட்டில் பயன்படுத்தப்படும் சில்லுகள் கருப்பு சிவப்பு கொண்டவையாக உள்ளன.
போரில் யானையும் உண்டு, குதிரையும் உண்டு. கோட்டையும் உண்டு வீரர்களும் உண்டு. அரசனும் உண்டு, அரசியும் உண்டு. போர் மரபுக்கும் தமிழர்களுக்கும் தொடர்பு இருப்பதை கீழடி நமக்குச் சொல்கிறது. 'ஆனைக்குப்பு' என்று சதுரங்க விளையாட்டுக்கு தமிழ் இலக்கியத்தில் பெயர் இருந்துள்ளது. 'ஆனைக்குப்பு ஆடுவோரைப் போலவே' என்று நாலாயிர திவ்ய பிரபந்தம் சொல்கிறது.
அந்தளவுக்குப் பல்லாயிரம் ஆண்டு தொடர்பு, சதுரங்க விளையாட்டுக்கும் தமிழ்நாட்டும் உண்டு. அறிவுக்கூர்மையும் வியூகமும் கொண்ட விளையாட்டு இது. அத்தகைய உலகளாவிய அறிவு விளையாட்டு இன்று தொடங்குகிறது.
அறிவுதான் இறுதிக்காலம் வரைக் காப்பாற்றும் கருவி என்று ஈராயிரம் ஆண்டுக்கு முன்பே சொன்ன வள்ளுவர் மண்ணில் உலகத்தின் அறிவுப் போட்டியானது தொடங்குகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டு தமிழ்நாட்டில் நடைபெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டை தெரிவித்து வருகின்றனர். கீழடி, அண்ணா என தமிழ்நாட்டின் சாதனைகளை பட்டியலிட்டு அரசியல் சதுங்கத்தின் தி.மு.க எப்போதும் சாம்பியனாக இருக்கிறது என்பதை தனது உரையின் மூலம் பறைசாற்றியுள்ளார்.
Also Read
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!