Tamilnadu
“இந்தியாவில் முதல் முறையாக பள்ளிகளில் காலை சிற்றுண்டி” : தியாகராயர் முதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரை !
தி.மு.க அரசின் ஓராண்டு நிறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் ஒன்றுதான் அரசு பள்ளிகளில் 'காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்'. இந்த அறிவிப்பு வெளியானதைப் பலரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டினர்.
இந்த திட்டத்திற்கான அரசணை நேற்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி திட்டம் முதல் கட்டமாக செயல்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 1,14,095 மாணவ, மாணவியர்களுக்குக் காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில், பள்ளிக்கு வரும் மாணவர்கள் பசியுடன் இருக்கக்கூடாது என்பதற்காக சர்.பிட்டி. தியாகராயர், பெருந்தலைவர் காமராசர், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர், எம்.ஜி.ஆர் ஆகியோர் தங்களின் ஆட்சி காலத்தில் மதிய உணவு திட்டத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தனர். இவர்கள் அனைவரையும் விட ஒருபடி மேல சென்று, மதிய உணவுத் திட்டத்துடன் 'காலை சிற்றுண்டி' திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் கல்வித்துறையில் ஏழை, எளிய மாணவர்களின் கல்வி நலனுக்காக உருவாக்கப்பட்ட உணவுத்திட்டங்கள் கடந்து வந்த பாதையைச் சுருக்கமாக இங்கு நாம் பார்ப்போம்.
1920ம் ஆண்டு திராவிட இயக்கத்தின் தாய்க் கட்சியான நீதிக்கட்சித் தலைவராக இருந்தவர் சர்.பிட்டி. தியாகராயர். இவர் சென்னை மாநகராட்சி மன்றத் தலைவராக இருந்தபோதுதான் அரசு பள்ளிகளில் முதன் முதலாக மதிய உணவு திட்டம் தொடக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டம் பாதியில் நின்றது.
பின்னர் 1957ம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் மீண்டும் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இது பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து 1982ம் ஆண்டும் எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் மதிய உணவுத் திட்டம், சத்துணவுத் திட்டமாக மாற்றிச் செயல்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 1989ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் மதிய உணவுத் திட்டத்தில் முட்டை, காய்கறிகளை வழங்கி சத்தாண திட்டமாகச் சத்துணவுத் திட்டத்தை மாற்றியமைத்தார். இதையடுத்து இன்று வரை மதிய உணவுத் திட்டத்தில் மாணவர்களுக்கு முட்டை வழங்கப்பட்டு வருகிறது.
இப்படி சத்துணவு திட்டம் ஒவ்வொருவர் ஆட்சியின்போதும் பல்வேறு மாற்றங்களைக் கண்டுவந்துள்ளது. இந்நிலையில்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை அறிவித்து அதற்கான அரசாணையையும் வெளியிட்டுள்ளார். இந்த காலை சிற்றுண்டி திட்டத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை மாணவர்களுக்குக் காலை உணவு வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
திருக்கோயில் பயிற்சிப் பள்ளிமாணவர்களுக்கு ஊக்கத்தொகை உயர்வு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!
-
வேலூரில் மினி டைடல் பூங்கா திறப்பு; ராசிபுரத்தில் டைடல் பூங்காவுக்கு அடிக்கல்: சாதனை படைத்த தமிழ்நாடு!
-
சென்னையில் ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை... வெற்றி கோப்பையை அறிமுகப்படுத்திய முதலமைச்சர் !
-
திருச்செங்கோடு மக்களுக்கு அடித்த ஜாக்பாட்... மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனை... புதிய வசதிகள் என்ன ?
-
100 இடங்களில் வாக்காளராக இருந்த பெண்... ஹரியானா தேர்தலில் குளறுபடிகளை அம்பலப்படுத்திய ராகுல் காந்தி !