Tamilnadu

ஏரியில் மகிழ்ச்சியாக குளித்த 3 மாணவர்கள்.. நண்பர்கள் கண் எதிரே நடந்த சோக சம்பவம்!

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். இவரது மகன் சஜீவன். அதே பகுதியைச் சேர்ந்த வடிவேலுவின் மகன் அருள். ஆவடி காமராஜர் நகரைச் சேர்ந்த சத்தியநாராயணனின் மகன் பிரவீன் வெங்கடேசன்.

இவர்கள் மூன்று பேரும் நண்பர்கள். 12ம் வகுப்பு முடித்துள்ள இவர்கள் நேற்று வெள்ளவேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோலப்பஞ்சேரி சுங்கச்சாவடி அருகே ஏரியில் குளிக்கச் சென்றள்ளனர்.

அப்போது, ஏரியில் குளித்துக் கொண்டிருந்த சஜீவன், அருள் ஆகிய இரண்டு பேரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதை கண்டு அதிர்ச்சியடைந்த பிரவீன் வெங்கடேசன் உடனே காவல்நிலையத்திற்கு தகவலை தெரிவித்துள்ளார்.

பிறகு அங்கு வந்த போலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து நீரில் மூழ்கிய இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் 2 மணிநேர தேடுதலுக்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் இருவரின் உடலையும் மீட்டனர்.

இதையடுத்து மீட்கப்பட்ட இரண்டுபேரின் உடலையும் உடற்கூறு ஆய்விற்காக போலிஸார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரியில் குளிக்கும்போது நீரில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: படுக்கையில் சிறுநீர் கழித்த சிறுமி.. வளர்ப்பு தாய் செய்த கொடூரம் - நெஞ்சை பதற வைக்கும் பகீர் சம்பவம்!