Tamilnadu

“அரிசிக்கு 5% GST.. ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு” : கொந்தளிக்கும் பொதுமக்கள் !

பையில் அடைத்து விற்கப்படும் அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கும் 5 சதவீத ஜி.எஸ்.டி வரி விதித்து ஜி.எஸ்.டி உத்தரவிட்டது. இந்த உத்தரவு வரும் 18ம் தேதி (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வர உள்ளது.

ஒன்றிய அரசின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஏற்கனவே பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு மக்களின் தினசரி செலவில் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், அரிசி மீது 5 விழுக்காடு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் அரிசி ஆலை மற்றும் கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இன்று கடைகளை அடைத்து போராட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று தமிழ்நாடு முழுவதும் அரிசி ஆலை மற்றும் கடை உரிமையாளர்கள் கடைகளை அடைத்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் ஒன்றிய அரசை கண்டித்து இந்த போராட்டம் வலுவாக நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் ஏராளமான அரிசி ஆலைகள் மற்றும் சிறு அரிசி கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் முடங்கியுள்ளது.

தமிழகம் மட்டுமல்லாது, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்காளம், சத்தீஷ்கர் உள்பட சில மாநிலங்களிலும் ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பை கண்டித்து போராட்டம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி.. கணவரின் செயலை வீடியோ எடுத்து மிரட்டிய மனைவி : உ.பி-யில் கொடூரம்!