Tamilnadu

கேரளாவிற்கு கடத்த முயன்ற 2 வயது குழந்தை.. 24 மணி நேரத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த தமிழ்நாடு போலிஸ்!

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே ஆத்தங்கரை பள்ளிவாசலில் மிகவும் பிரசித்தி பெற்ற தர்கா ஒன்று அமைந்துள்ளது. இந்த தர்காவிற்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளாவிலிருந்து ஏராளமான இஸ்லாமிய பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு அவர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறுவதற்காக நேர்த்தி கடனை செலுத்துகின்றனர்.

அதேபோல் நேற்று தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இருந்து சாகுல் ஹமீது மற்றும் அவரது மனைவி நாகூர் மீரா இவரது மகன் மற்றும் 2 வயது பெண் குழந்தை நஜிலா பாத்திமா ஆகியோர் ஆத்தாங்கரை பள்ளிவாசலுக்கு வந்திருந்தனர்.

பின்பு சாகுல் ஹமீது அவரது மகன் மற்றும் மகளுக்கு மொட்டை அடித்து நேர்திகடன் செலுத்தியுள்ளார். இரவு நேரம் ஆகிவிட்டதால் தர்காவில் உள்ள திண்ணையில் குழந்தைகளுடன் சாகூல் ஹமீது மற்றும் நாகூர் மீரா படுத்து தூங்கி விட்டனர். பின்பு காலையில் எழுந்திருக்கும் போது பெண் குழந்தை நஜிலா பாத்திமாவை காணவில்லை. இதனால் பதறி அடித்து போய் பெற்றோர்கள் குழந்தையை அங்கும் இங்கும் தேடினர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்காததால் போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனை அடுத்து அங்கு வந்து அங்கு இருந்த சிசிடிவிகளை ஆய்வு செய்தனர். சிசிடிவி ஆய்வில் அதிகாலையில் குழந்தையை காரில் கடத்தி செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதையடுத்து போலிஸார் அந்த காரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

மேலும், ஆத்தங்கரை பகுதியில் உள்ள விடுதிகளில் போலிஸார் விசாரணை நடத்தினர். அப்போது தவறான முகவரி கொடுத்து தம்பதியர் ஒரு முதியவர் என மூன்று பேர் தங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் அந்த முதியவர் போலிஸாரிடம் சிக்கியுள்ளார். இதையடுத்து போலிஸார் அவரிடம் விசாரணை செய்ததில் குழந்தையை கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரியவந்தது . பிறகு போலிஸார் கேரளாவிற்கு விரைந்தினர்.

இந்நிலையில் போலிஸார் வருவதை அறிந்த அந்தக்குழு கடத்தல் கும்பல் குழந்தையை திருச்செந்தூரில் இருந்து குலசேகரபட்டிணம் செல்லும் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை அருகில் துண்டு விரித்து படுக்க வைத்து விட்டு சென்றுள்ளனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் போலிஸாருக்கு தெரிவித்துள்ளனர். பினனர் திருச்செந்தூர் போலிஸார் தகவல் அளித்துள்ளனர். திருச்செந்தூர் போலிஸார் குழந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக ஆத்தங்கரை போலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அந்த குழந்தை ஆற்றங்கரை பள்ளிவாசலில் காணப்போன நஜிலா பாத்திமா என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து குழந்தைய பெற்றோரிடம் போலிஸார் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் நடந்து 24 மணி நேரத்திலேயே குழந்தையை மீட்ட போலிஸாருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Also Read: மண்ணிலிருந்து வந்த சத்தம்! அம்மாவால் உயிரோடு புதைக்கப்பட்ட சிறுமி.. பீகாரை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்!