Tamilnadu

அருள்வாக்கு சொல்வதாக கூறி 70 பவுன் நகை மோசடி செய்த தம்பதி.. போலி சாமியாரை கைது செய்து போலிஸ் விசாரணை!

விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் பெருமாள் பட்டியைச் சேர்ந்தவர் தங்கமாயாள் (42). இவருடைய கணவர் பாலமுருகன் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள பென்னிங்டன் மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், உடல்நிலை சரியில்லாததால் தனது வீட்டு அருகில் உள்ள முப்பிலிமாடன் சாமி கோயில் அருள்வாக்கு சொல்லக்கூடிய பழனிகுமாரிடம் திருநீர் வாங்கியதாகவும், பின்னர் கடை நன்றாக நடக்கவில்லை என்பதால் மீண்டும் திருநீர்  கேட்டதாகவும் கூறப்படுகிறது.

அதற்கு பழனிகுமார் அவர்களிடம் உள்ள தங்க நகையை பூஜையில் வைக்க வேண்டும் என கேட்டதாகவும் அதற்கு தங்கமாயாள் தன்னிடம் இருந்த  26 பவுன் நகை கொடுத்ததாகவும், பழனிகுமார் மற்றும் அவரது மனைவி ரம்யா இருவரும் நகையை வைத்துக்கொண்டு கொடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதுபோல் பக்கத்திலும் பலரிடம் நகையை ஏமாற்றி உள்ளதாகவும் ஆலம்பட்டியைச் சேர்ந்த முருகேசன், மதிவாணன் மனைவி ராஜலக்ஷ்மி, மங்காபுரம் மாடசாமி மகன் ராமேஸ்வரன், பெருமாள்பட்டி பொன்னுச்சாமி மகன் கௌதமன் உட்பட பலரிடம் சுமார் 70 பவுன் நகைக்கு மேல் ஏமாற்றியதும் தெரிய வந்ததாகவும், இதனை தெரிந்தவுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலையத்தில் தங்கமாயாள்  பழனி குமார் மீது புகார் அளித்துள்ளார்.

ஶ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி சபரிநாதன் உத்தரவுபடி நகர் குற்றப்பிரிவு போலிஸார் வழக்கு பதிவு செய்து பழனிகுமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதுபோல் மோசடியில் யார் யார் ஈடுபட்டார்கள் என்பதையும் விசாரணை செய்து வருகிறார்கள். மேலும் தலைமறைவாக உள்ள பழனி குமார் மனைவி ரம்யாவை தேடி வருகின்றனர்.

Also Read: “மனைவி, 2 குழந்தைகளை கொன்றுவிட்டு ஆட்டோ டிரைவர் தற்கொலை” : வெளியான பகீர் வீடியோ - வழக்கில் மூவர் கைது!