Tamilnadu

799 ரூபாய் சேலைக்கு ஆசைப்பட்டு 1 லட்சம் ரூபாயை இழந்த பெண் ஆசிரியர் : ஆன்-லைன் ஷாப்பிங் பரிதாபம் !

ராமநாதபுரம், வெளிப்பட்டினத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மனைவி செல்வி (35). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

இவர் கடந்த ஜூன் 19ம் தேதி மொபைல் போனை உபயோகித்த போது அதில் ரூ.799க்கு சேலை ஒன்றை பார்த்துள்ளார். உடனே அதை வாங்க ஆசைப்பட்ட அவர் அதனை ஆர்டர் செய்துள்ளார்.

அவர் ஆர்டர் செய்த சேலை கூரியர் சேவை மூலம் ஜூன் 25ம் தேதி அவருக்கு வந்துள்ளது. ஆனால் அந்த சேலையில் கிழிசல் இருந்துள்ளது. உடனடியாக தான் ஆர்டர் செய்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு பணத்தை திரும்ப தருமாறு கூறியுள்ளார்.

அதற்கு ஒரு விண்ணப்பத்தை அனுப்பிய அந்த நபர்கள் வங்கிக்கணக்குகள் தகவல்கள் மற்றும் ரகசிய எண்ணையும் கேட்டுள்ளனர். உடனடியாக செல்வி அந்த தகவல்களை அவர்களுக்கு அனுப்பியுள்ளார். தொடர்ந்து வங்கிக்கணக்கிற்கு பணம் திரும்ப அனுப்பப்படும் என கூறி விட்டு இணைப்பை அவர்கள் துண்டித்துள்ளனர்.

அதன்பின்னர் தான் செல்விக்கு அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அவரது இரு வங்கி கணக்கில் இருந்து ரூ.1,25,000 எடுக்கப்பட்டிருந்தது. தான் ஆன்லைனில் சேலை வாங்கிய நபர்கள்தான் இவ்வாறு மோசடி செய்துள்ளனர் என்பதை உணர்ந்த செல்வி சைபர் க்ரைம் போலிஸில் புகாரளித்துள்ளார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த சைபர் க்ரைம் போலிஸார் சம்பவம் தொடர்பாக மொபைல் எண்ணை வைத்து விசாரணை நடத்திவருகின்றனர். ஆசிரியர் ஒருவர் சேலைக்கு ஆசைப்பட்டு பணத்தை இழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “எப்போதும் குதிரை பேர அரசியல் நினைப்புதானா? - நிதியமைச்சரை வறுத்தெடுத்த இணையவாசிகள்” : பின்னணி என்ன?