Tamilnadu

பிறப்பில் மட்டுமல்ல.. 12ம் வகுப்பு தேர்வில் ஒரே மதிப்பெண் எடுத்த இரட்டையர்கள்!

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடந்து முடிவடைந்தது. இதையடுத்து ஜூன் 20ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார்.

இதில், 12-ம் வகுப்பு தேர்வை 9.12 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில் 8.21 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.95 % தேர்ச்சியுடன் பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

அதேபோல், 97.27 % தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் 2-வது இடத்தையும், 97.02 % தேர்ச்சியுடன் ராமநாதபுரம் மாவட்டம் 3வது இடத்தையும் பிடித்துள்ளது. 12ம் வகுப்பில் மாணவர்களை விட மாணவிகள் 5.36% கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும், 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் திருவள்ளூரைச் சேர்ந்த கீர்த்தனா என்ற மாணவி தமிழ் பாடத்தில் 100க்கு நூறு மதிப்பெண்களைப் பெற்று அசத்தியுள்ளார். இப்படிப் பல மாணவர்கள் பொதுத்தேர்வில் அசத்தியுள்ளனர்.

இந்நிலையில், இரட்டை சகோதரர்கள் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒரே மதிப்பெண் எடுத்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. திருப்பூர் ஸ்ரீநகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி அக்நெல். இந்த தம்பதிக்கு ரோகித் ராஜா, ரோஷன் ராஜா என இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் இரட்டை சகோதரர்கள் ஆவர்.

இந்த இரட்டை சகோதரர்கள் திருப்பூரில் உள்ள தனியார்ப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து பொதுத்தேர்வு எழுதியுள்ளனர். பிறகு வெளியான தேர்வு முடிவில் இருவரும் ஒரே மாதிரி 417 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

Also Read: மாற்றுத்திறனாளி பாடகர் திருமூர்த்தியின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் கமல்.. என்ன தெரியுமா அது?