Tamilnadu

பயணிபோல் நடித்து விமான நிலையத்திற்குள் நுழைந்த கணவர்.. மனைவியை கவர நினைத்து கம்பி எண்ணும் பரிதாபம்!

விருதுநகரை சேர்ந்த சசிகுமார் என்பவர் கனடா நாட்டு குடியுரிமை பெற்று அந்த நாட்டில் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் தற்போது இந்தியா வந்துள்ளார். இவரின் மனைவி துபாய் செல்லவுள்ளதால் அவரை வழியனுப்ப சசிகுமார் சென்னை விமான நிலையத்துக்கு வந்துள்ளார்.

விமான நிலையத்தின் உள்ளே செல்ல பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது. இந்த நிலையில் மனைவியை உள்ளே சென்று வழியனுப்ப விரும்பிய அவர், போலியாக டிக்கெட் ஒன்றை தயார் செய்து அதன்மூலம் பயணிபோல் விமானநிலையத்தின் உள்பகுதிக்குள் நுழைந்துள்ளார்.

உள்ளே 3 மணி நேரம் இருந்த அவர், மனைவியை வழியனுப்பி வைத்து வெளியே செல்ல முயன்றுள்ளார். அப்போது வெளியே செல்லும் வழியில் பணியில் இருந்த சி.ஐ.எஸ்.எப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் சசிகுமாரை நிறுத்தி விசாரித்துள்ளார். அவரிடம் நான் பயணம் செய்ய விரும்பாததால் வெளியே வந்தேன் எனக் கூறியுள்ளார்.

ஆனால் அவர் வைத்திருந்த விமான டிக்கேட்டில் "ஆப் லோடு" என்ற சீல் இல்லாததால் சந்தேகமடைந்த சிஐஎஸ்எப் வீரர், உயர் அதிகாரிகளிடம் இது குறித்து கூறியுள்ளார். அவர்கள் சசிகுமாரிடம் விசாரணை நடத்தியதில் அவர் வைத்திருந்தது போலி விமான டிக்கேட் என்பதும் மனைவியை வழியனுப்ப விமானநிலையம் உள்ளே சென்றதும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து விமான நிலைய அதிகாரிகள் சசிகுமாரை விமான நிலைய காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக சசிக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலி டிக்கெட் மூலம் விமான நிலையம் உள்ளே 3 மணி நேரம் ஒருவர் வலம் வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “துண்டிக்கப்பட்ட சிசுவின் தலை.. தாயின் வயிற்றில் வைத்து தைக்கப்பட்ட கொடூரம்” - பின்னணி என்ன?