EPS & OPS
Tamilnadu

பொதுக்குழுவை தள்ளிவைக்க வேண்டும்.. OPS கடிதம் நீதிமன்றத்தில் தாக்கல் - நடந்தது என்ன?

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் ஜூன் 23ம் தேதி நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில், பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி திண்டுக்கல் எஸ்.சூரியமூர்த்தி என்பவர் அதிமுக உறுப்பினர் என கூறி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனுவை நிராகரிக்கக் கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நிராகரிப்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து வழக்கின் விசாரணையை ஜூலை 22ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இந்நிலையில், வழக்கை முன் கூட்டியே விசாரிக்க வேண்டும் என சூரியமூர்த்தி தரப்பில் தாக்கல் செய்ய மனு, நீதிபதி பிரியா முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஓ.பி.எஸ். தரப்பில் வழக்கறிஞர் ராஜலட்சுமி ஆஜராகி பொதுக்குழு கூட்டத்தை தள்ளிவைக்கக் கோரி இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளதால், பொதுக்குழுவை எதிர்த்த மனுவை விசாரிக்கக்கோரிய மனு காலாவதியாகிவிட்டதாக கருத வேண்டுமென வாதிடப்பட்டது.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்து தான் பொதுக்குழுவை கூட்ட முடியும் என்றும், ஆனால் பொதுக்குழுவை தள்ளிவைக்க ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தானே கடிதம் எழுதியுள்ளதாகவும் ஓ.பி.எஸ். தரப்பில் வாதிடப்பட்டது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பொதுக்குழு நடைபெற்றால் இருதரப்பிலும் லட்சக்கணக்கான தொண்டர்கள் கூடுவார்கள் ,மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடும் ஏற்கனவே அதிமுக தொண்டரான மாரிமுத்து தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 2001 ஆண்டு ஜெயலலிதா எதிரான வழக்கின் தீர்ப்பின் போது மூன்று மாணவிகள் பேருந்தில் எரிக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றது, தமிழகம் தற்போது அமைதிப் பூங்காவாக இருக்கிறது இந்த பொதுக்குழு நடைபெற்றால் பெருமளவில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

திண்டுக்கல் சீனிவாசன் தரப்பில் ஆஜரான விஜய , மனுதாரர் சூரிய்மூர்த்தி கட்சி உறுப்பினரே இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு மனுதாரர் தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டு, தான் உறுப்பினர் இல்லை என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என வாதிடப்பட்டது.

அப்போது பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமென அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் சபாநாயகர் தனபால் உள்ளிட்டோர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து பொதுக்குழுவிற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை முன்கூட்டியே விசாரிக்க வேண்டுமென்ற மனு குறித்து அனைத்து எதிர் மனுதாரர்களும் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி பிரியா, விசாரணையை நாளை ஒத்திவைத்தார்

Also Read: “ஒரே நேரத்தில் 700 வீரர்கள் விளையாடும் வகையில் சர்வதேச அரங்கம்..” : அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!