Tamilnadu

“காதல் கணவன் மீது அதிருப்தி.. திருமணமாகி 8 மாதத்தில் இளம்பெண் தற்கொலை” : போலிஸ் தீவிர விசாரணை!

சென்னை தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த மேகலா என்பவர் சாலிகிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது போட்டோ ஸ்டுடியோ வைத்துள்ள சாலிகிராமத்தைச் சேர்ந்த யுவராஜ் என்பவருடன் மேகலாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் காதலாக மாறிய நிலையில், இந்த விவகாரம் மேகலாவின் பெற்றோருக்கு தெரிய வர அவர்கள் மேகலாவுக்கு வேறு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

இதனால் கடந்த 8 மாதத்திற்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி வடபழனி கோவிலில் வைத்து மேகலாவும், யுவராஜும் திருமணம் செய்துள்ளனர். ஆனால் திருமணத்துக்கு பிறகு யுவராஜ் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர் என்பது மேகலாவுக்கு தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக தினமும் இருவரின் இடையே பிரச்சினைகள் ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு யுவராஜ் அடித்ததாக கூறி மேகலா தன் தாய் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு வந்தும் கணவரின் செயலால் மேகலா கடும் மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், படுக்கை அறைக்குச் சென்ற மேகலா வெகு நேரமாகியும் வெளியே வராமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த பெற்றோர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது மேகலா மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

பின்னர் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “மோடி பிடித்த முதலை..” : பாட புத்தகத்தில் இடம்பெற்ற மோடியின் உளறல் கதைகளால் சர்ச்சை - பின்னணி என்ன?