Tamilnadu

“இதுபோல நடத்துவது அநீதி.. ஏன் அக்னிபாத் திட்டத்தை எதிர்க்கிறேன்?” : தி.மு.க MP சொன்ன தெளிவான விளக்கம்!

நாடுமுழுவதும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். பீகாரில் தொடங்கிய இந்த போராட்டம், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் முக்கிய நகரங்களுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த போலிஸார் தடியடி தாக்குதல் நடத்தியதால், ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் ரயில்களுக்கு தீவைத்த சம்பவமும் அரங்கேறியுள்ளது.

அதுமட்டுமல்லாது பீகாரில் இந்த திட்டத்தை ஆதரித்து பேசிய பா.ஜ.க தலைவர்களின் வீடுகள், அலுவலகங்களை சூரையாடி தீ வைத்ததால் பெரும் வன்முறைகாடாக அப்பகுதிகள் காட்சி அளிக்கிறது. இந்நிலையில் வட மாநிலங்களில் பல்வேறு பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் போராட்டம் தீவிரமடைந்து வருவதால், “இந்திய நாட்டின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு, இலட்சக்கணக்கான இளைஞர்களின் இராணுவப் பணி எனும் இலட்சியத்தைச் சிதைக்கும் இந்த “அக்னிபத்” எனும் தேச நலனுக்கு எதிரான திட்டத்தை உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்” என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே பல்வேறு அரசியல் கட்சியினர், எதிர்கட்சி எம்.பி. எல்.எல்.ஏக்கள் உள்ளிட்ட பலரும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம். அப்துல்லா தனது சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எம்.எம். அப்துல்லா எம்.பி வெளியிட்டுள்ள பதிவில், “நான் ஏன் அக்னிபாத் திட்டத்தை எதிர்க்கிறேன்? நாம் அமைதியாக வாழ உயிரைப் பணயம் வைத்து வாழும் ஒருவனுக்கு குறைந்தபட்ச பணிப் பாதுகாப்பு கூட இல்லாது "கான்டிராக்ட் லேபர்" போல நடத்துவது அநீதி.

அக்னிபாத் திட்டத்திற்கு வடநாடு பற்றி எரிகிறது. ஆனால் தமிழ்நாட்டில் ஒன்றுமே எதிர்ப்பில்லையே?

வடநாட்டில் படிக்கும் வாய்ப்புகள் மிகக் குறைவு. எனவே அவர்களது குறைந்தபட்ச பள்ளிப் படிப்பிற்கு கிடைக்கும் அரசு வேலையாக ராணுவப் பணிகளையே நம்பியுள்ளனர்.

தமிழகத்தில் படிக்கும் வாய்ப்பு மிக மிக அதிகம். எனவே இங்கு டாக்டர்களாக இஞ்சீனியர்களாக ஆடிட்டர்களாக வக்கீல்களாக உருவாகிறோம். இதானால் தான் நீட் வந்த போது வடநாட்டில் சலசலப்பு இல்லை. தமிழ்நாடு கொதித்தது!

அவர்களுக்கு சோறு ராணுவத்தில் உள்ளது அவர்கள் கொதிக்கிறார்கள். நாம் கொதிக்கவில்லை.

நமக்கு சோறு படிப்பில் உள்ளது. நீட்டிற்கு நாம் கொதிக்கிறோம். அவர்கள் கொதிக்கவில்லை.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: அக்னிபாத் திட்டத்தை இந்தியர்கள் எதிர்ப்பது ஏன் - ராணுவம் தனியாரிடம் சென்றால் ஏற்படும் பேரிழப்பு என்ன?