Tamilnadu

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்று முடியாமல் திரும்பிய பெண்.. நேரில் அழைத்து நடவடிக்கை எடுத்த ஆட்சியர்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூன் 8ம் தேதி தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசு நலத்திட்ட உதவிகளைப் பயனாளிகளுக்கு வழங்கினார். மேலும் புதிய திட்டங்களுக்கு அடிகல் நாட்டினார்.

சிவகங்கை மாவட்டம், காரையூரில் நடைபெற்ற அரசு விழாவில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளைப் பயனாளிகளுக்கு வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். பின்னர், புதுக்கோட்டையில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு 81.13 கோடி மதிப்பிலான 138 திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதற்கிடையில், புதுக்கோட்டை அரசு இல்லம் முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை மனு கொடுக்க சோலை மலர் என்ற பெண் தனது குழந்தையுடன் வந்துள்ளார். அப்போது கூட்ட நெரிசலில் பாதுகாவலர்கள் அவரை கீழே தள்ளியுள்ளனர். இதனால் அந்த பெண்ணால் கோரிக்கை மனுவைக் கொடுக்க முடியவில்லை.

இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து உடனே அவரை நேரில் அழைத்து கோரிக்கையைக் கேட்டறிந்துள்ளார். பிறகு உடனடியாக அவரின் கோரிக்கையின் படி சோலை மலருக்கு தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியர் வேலையை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்துள்ளார். மேலும் பெண்ணின் தாய்க்கு மாத ஓய்வூதியத்தை உறுதி செய்துள்ளார் ஆட்சியர்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் இந்த துரித நடவடிக்கைக்கு புதுக்கோட்டை மக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read: ஆன்லைன் ரம்மி குறித்த அவசர சட்டம் - ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் குழு : முதலமைச்சர் அதிரடி உத்தரவு !