Tamilnadu

‘எண்ணம் போல் வாழ்க்கை’.. ஆட்டோவில் தவறவிட்ட திருமண நகையை அஜித் பட பாணியில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்!

விருதுநகர் பெரிய வள்ளிக்குளத்தைச் சேர்ந்தவர்கள் கருப்பசாமி- முத்துலட்சுமி தம்பதியினர். இவர்களது மகளுக்கு விருதுநகர் ராமர் கோவிலில் இன்று காலை திருமணம் நடந்தது. மற்ற வைபவங்கள் விருதுநகர் கந்தசாமி ராஜம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

பெண்ணின் பெற்றோர்கள் விருதுநகர் ராமர் கோவிலில் இருந்து மண்டபத்திற்கு செல்ல அவ்வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி உள்ளனர். ஆட்டோ ஓட்டுனர் ராமர் அவர்களை திருமண மண்டபத்தில் இறக்கி விட்டு ஆர்.எஸ்.ஆர்.நகரில் உள்ள தனது வீட்டுக்கு சென்று விட்டார். சுமார் 1 மணி நேரம் கழித்து மீண்டும் மற்றொரு சவாரிக்காக வீட்டில் இருந்து புறப்பட்டு உள்ளார்.

அப்போது ஆட்டோவின் பின் சீட்டில் பேக் ஒன்று இருப்பதை கண்டார். பேக்கை திறந்து பார்த்த போது நகைகள் இருப்பதைக் கண்டார். உடன் காலை திருமண மண்டபத்தில் சவாரி இறக்கி விட்டது நினைவுக்கு வர உடன் அந்த மண்டபத்திற்கு சென்றார்.

நகையை தவற விட்ட கவலையில் பெண்ணின் பெற்றோர்கள் கண்ணீருடன் அங்கு நின்றிருந்தனர். ஆட்டோ ஓட்டுனர் ராமர் அவர்களிடம் நகை இருந்த பேக்கை வழங்கினார். அங்கிருந்த கிழக்கு காவல் நிலைய போலிஸார் முன்னிலையில் நகைகள் சரிபார்க்கப்பட்டு பெண்ணின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆட்டோ ஓட்டுனரின் நேர்மையான செயலால் திருமண நகையை இழந்து பெண்ணின் வாழ்க்கையை குறித்த கவலையில் இருந்த பெண்ணின் பெற்றோர்களின் கவலை தீர்ந்தது.

Also Read: ஆன்லைன் ரம்மி குறித்த அவசர சட்டம் - ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் குழு : முதலமைச்சர் அதிரடி உத்தரவு !