Tamilnadu

“நபிகள் நாயகத்தின் வரலாற்றை படித்தால் முழுமனிதனாக மாறலாம்” : பா.ஜ.க கும்பலுக்கு அமைச்சர் மஸ்தான் அட்வைஸ்!

உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தமிழக மீன் வளர்ச்சிக் கழகத்தின் தலைவரும், நாகை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான கௌதமன் முன்னிலையில் பழுதடைந்த கட்டிடங்களை இன்று ஆய்வு செய்து அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறுகையில், “நபிகள் நாயகத்தின் வரலாறை படித்தவர்கள் பெரியார், அம்பேத்கர், காமராசர், கலைஞர் உள்ளிட்ட மூத்த தலைவர்கள். ஊமைகளை பேச வைத்தவர்கள், நடக்க முடியாதவர்களை நடக்க வைத்தவர்கள், பார்வையற்றவர்களை பார்க்க வைத்தவர்கள்தான் திராவிட மாடல்.

நபிகள் நாயகத்தின் முழு வரலாற்றைப் படித்தால் பாஜக செய்தித் தொடர்பாளர் முழு மனிதனாக மாற முடியும். மீண்டும் இதுபோல நபிகள் நாயகத்தை பற்றி விமர்சனம் செய்தால், பேரறிஞர் அண்ணா வழியில் எதிர்ப்போம் என்று பாசத்தோடு கேட்டுகொள்கிறேன்.

20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் விடுதலையாக சட்ட வல்லுனர்கள் குழு அமைத்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதிமுக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அ.தி.மு.க அமைச்சர்கள் மீது ஆதாரத்துடன் ஊழல் புகார் அளித்தும் அதனை சட்டப்படி சந்திக்க முடியாமல் ஓடி ஓளிபவர்களை பற்றி இதுவரை எதுவும் பேசாமல் வாய் மூடி மௌனியாக இருக்கும் அண்ணாமலை ஆதாரமின்றி தி.மு.க அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டை வைப்பது வேடிக்கையாக இருக்கிறது. பா.ஜ.க தமிழக தலைவர் அண்ணாமலை தி.மு.க மீது வைக்கும் ஊழல் புகார்களை நிரூபித்தால் அதனை சட்டப்படி எதிர்கொள்வோம்” என்று கூறினார்.

Also Read: மக்களுடன் மக்களாய் 8 ஆண்டுகள் பதுங்கி இருந்த பயங்கரவாதி.. போலிஸ் எடுத்த ஆக்‌ஷன் - யார் இந்த தலீப் உசேன்?