Tamilnadu

20 சவரன் நகை அடகு வைத்து ஆன்லைன் ரம்மி விளையாடிய பெண்.. முழு பணத்தையும் இழந்ததால் எடுத்த விபரீத முடிவு!

சென்னை அடுத்த, மணலி புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியராஜ். இவரது மனைவி பவானி.பட்டதாரியான இவர் கந்தன்சாவடி உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த தம்பதிகளுக்குக் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், பவானி கடந்த ஒரு வருடமாக ஆன்லைன் ரம்மி விளையாடுவதில் தீவிரமாக இருந்துள்ளார். இதுகுறித்து அவரது கணவர் மற்றும் உறவினர்கள் பலமுறை எச்சரித்தும் ஆன்லைன் ரம்மியில் தீவிரமாக விளையாடி வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் இவர் தனது 20 சவரன் நகை, மேலும் தனது இரண்டு சகோதரிகளிடம் தலா 1.5 லட்சம் வாங்கி அதையும் ஆன்லைனில் விளையாட்டில் இழந்துள்ளார். இதனால் மன வேதனையடைந்த பவானி இது குறித்து தனது சகோதரிகளிடம் தெரிவித்துள்ளார்

இந்நிலையில், நேற்று இரவு வீட்டில் குளித்துவிட்டு வருவதாகக் கூறிவிட்டு குளியலறைக்குச் சென்றவர் நீண்ட நேரமாக திரும்பி வரவில்லை. இதனால் கணவர் பாக்கியராஜ் கதவைப் பலமுறை தட்டியும் அவரிடம் இருந்து பதில் எதுவும் வரவில்லை.

இதையடுத்து அவர் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ரம்மி விளையாட்டில் பணம் இழந்ததால் இளம்பெண் தற்கொலை செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கதவைத் தட்டி இளம் பெண் மீது ஆசிட் வீசிய பெண்.. விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை!