Tamilnadu

மூதாட்டியை கொன்று நகைகள் கொள்ளை.. வீட்டை பூட்டி சாவியை எடுத்துச் சென்ற கொள்ளையர்கள் - பகீர் சம்பவம்!

புதுச்சேரி சாமிப்பிள்ளைதோட்டம் கம்பர் வீதியை சேர்ந்த புருஷோத்தமன் மனைவி அஞ்சலை (வயது 80). கணவர் இறந்த நிலையில், வளர்ப்பு மகளுடன் வசித்து வந்தார். தற்போது அவரும் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக அஞ்சலை வீட்டின் கதவு மூடியே இருந்தது. நேற்று இரவு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் போலிஸுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே லாஸ்பேட்டை காவல்நிலைய போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தது, வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் மூதாட்டி அஞ்சலை பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அங்கிருந்து மூதாட்டியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலிஸார் நடத்திய விசாரணையில், மூதாட்டி காதில் அணிந்திருந்த தங்க கம்மல், வளையல் காணவில்லை. வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்டு தெரிந்து கொண்டு அவரை கொலை செய்து விட்டு நகைகளை கொள்ளையடித்து இருக்கலாம் என்பது தெரியவந்தது.

மேலும் இந்த பயங்கர சம்பவத்தை அரங்கேற்றி மர்ம ஆசாமிகள் தடயங்களை மறைக்க கொலை நடந்த வீட்டில் மிளகாய் பொடியை தூவி விட்டு தப்பிச் சென்று உள்ளனர். இதுதவிர வீடு பூட்டிக் கிடந்த நிலையில் மூதாட்டி கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். வீட்டை பூட்டி விட்டு சாவியை மர்ம ஆசாமிகள் எடுத்துச் சென்று இருப்பதும் தெரியவந்துள்ளது.

போலிசார் வந்து பார்த்த போது பூட்டிக் கிடந்த வீட்டை அதன் உரிமையாளரிடம் இருந்து மாற்றுச் சாவியை வாங்கி கதவை திறந்துள்ளனர். வீட்டு கதவு பூட்டப்பட்டு இருந்த நிலையில் இந்த கொலையில் தொடர்புடையவர்கள் மூதாட்டிக்கு தெரிந்தவர்களாக அல்லது அந்த பகுதியை சேர்ந்தவர்களாக தான் இருக்க வேண்டும் என்று போலிசார் சந்தேகிக்கிறார்கள்.

Also Read: பிறந்தநாள் மதுவிருந்தில் நண்பருக்குள் நடந்த சண்டை.. ட்ரீட் வைத்த நண்பர் அடித்துக் கொலை - பகீர் தகவல்!