Tamilnadu

குளித்து விட்டு வந்த பள்ளி மாணவன்.. சார்ஜில் இருந்த செல்போனை தொட்டதால் நடந்த விபரீதம்!

வேலூர் மாவட்டம், சின்னஅல்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். இவருடைய மனைவி பானுமதி. இந்த தம்பதிக்கு கோபிநாத் (9) என்ற மகன் இருந்தார். கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வந்தான்.

தற்போது கோடை விடுமுறை என்பதால் கோபிநாத் ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் பானுமதி செல்போனுக்கு சார்ஜ் போட்டுள்ளார். பிறகு குளித்துவிட்டு வந்த கோபிநாத் ஈரக்கையுடன் செல்போனை சார்ஜரில் இருந்து எடுக்கும்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்துள்ளது.

இதில், கோபிநாத் அலறியபடியே சம்பவ இடத்தில் மயங்கிச் சரிந்து விழுந்தான். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பானுமதி உடனே மகனைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சார்ஜரில் இருந்து செல்போனை எடுக்கும்போது மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த தூங்கிக் கொண்டிருந்த தந்தை: தாயை கண்டதும் தப்பிய மகன்; போதையில் வெறிச்செயல்!