Tamilnadu

“2,000 ஆண்டுகளுக்கும் முற்பட்ட குவளை கண்டுபிடிப்பு” : வியக்க வைக்கும் ‘வெம்பக்கோட்டை’ அகழாய்வு!

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே வைப்பற்றின் வடகரையில் அமைந்துள்ள உச்சிமேட்டில், 25 ஏக்கர் பரப்பளவிலான தொல்லியல் மேட்டில், கடந்த மார்ச் 16ம் தேதி முதல் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.

வைப்பாற்றின் வடக்கு கரையோரத்தில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து மேற்கொள்ளப்பட்ட மேற்பறப்பு அகழாய்வின் மூலம் இந்த தொல்லியல் மேட்டில் நுண்கற்காலம் முதல் இடைக்காலம் வரை தொடர்ந்து மனிதர்கள் வாழ்ந்ததற்கான பல்வேறு அடையாளங்கள் வெளிப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இங்கு அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து தமிழ்நாடு அரசு இங்கு அகழாய்வு நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் வருகின்றனர்.

இந்நிலையில், இந்த அகழாய்வில் முன்னதாக சுடுமண்ணால் ஆன பகடைக்காய், தக்களி, ஆட்டக்காய்கள், முத்து மணிகள், சங்கு வளையல்கள், சுடு மண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருட்கள், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சுடு மண் அகல்விளக்கு, யானை தந்தால் செய்யப்பட்ட அணிகலன், சுடுமண்ணால் ஆன தொங்கட்டான் ஆகிய அணிகலன்கள் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட, காலத்தால் அழியாத கலை நயம் மிக்க கண்கவர் குவளை கண்டறியப்பட்டுள்ளது. அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய இந்த குவளை எதற்காக பயன்படுத்தியுள்ளனர் என்பது குறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

தற்பொழுது கண்டறியப்பட்ட அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சுடுமண் குவளை தொன்மையான மனிதர்கள் கலைநயம் மிக்க பொருட்களை உபயோகம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “வெம்பக்கோட்டை அகழ்வாய்வில் புதிதாகக் கண்டெடுக்கப்பட்டுள்ள, சுடுமண்ணால் ஆன, ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட, காலத்தால் அழியாத கலை நயம் மிக்க கண்கவர் குவளை.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: கீழடியை தொடர்ந்து தமிழரின் பெருமைகளை பறைசாற்றும் விருதுநகர் அகழாய்வு: தொன்மையான பொருட்கள் கண்டுபிடிப்பு!