Tamilnadu

இன்ஸ்டாவில் காதலிக்கு மெசேஜ் அனுப்பியதால் ஆத்திரம்.. பீர் பாட்டிலால் இளைஞனை குத்திய காதலனுக்கு காப்பு!

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, மேயர் பாசுதேவ் தெருவில் வசிக்கும் முனுசாமி என்பவரின் மகன் சுரேந்தர் (19). நேற்று (மே 8) இரவு சுமார் 8 மணியளவில் வீட்டிலிருந்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த விமல் மற்றும் சூர்யா ஆகியோர் சுரேந்தரிடம் எங்கே உனது அண்ணன் ஆனந்த் என கேட்டபோது, சுரேந்தர் தெரியாது எனக் கூறியிருக்கிறார்.

உடனே இருவரும் வெளியே வா உன்னுடன் பேச வேண்டும் என சுரேந்தரை கூப்பிட்டு மறைவான இடத்துக்கு அழைத்தச் சென்று ஏன் எனது காதலிக்கு இன்ஸ்டாகிராமில் உனது அண்ணன் ஆனந்த் ஏன் குறுஞ்செய்தி அனுப்பினான். அவனை தொலைத்துவிடுவேன் என மிரட்டி, அவர்கள் மறைத்து வைத்திருந்த பீர் பாட்டிலால் சுரேந்தரை தாக்கி இரத்தக்காயம் ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றனர்.

அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் சுரேந்தரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்ததின்பேரில், சிகிச்சை பெற்று வரும் சுரேந்தர் மேற்படி சம்பவம் குறித்து கொடுத்த புகார் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில், சுரேந்தரிடம் உனது அண்ணன் ஆனந்த், எதற்காக எனது காதலிக்கு இன்ஸ்டாகிராமில் தேவையில்லாத குறுஞ்செய்திகள் அனுப்பினான் என கேட்டு தகராறு செய்து, விமல் மற்றும் சூர்யா சேர்ந்து பீர் பாட்டில் மற்றும் கையால் சுரேந்தரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றது தெரிய வந்தது.

அதன்பேரில், காவல் குழுவினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டு, வழக்கில் சம்பந்தப்பட்ட கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த விமல் (22) என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விமல் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். மேலும், தலைமறைவாக உள்ள சூர்யா என்பவரை பிடிக்க காவல் குழுவினர் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

Also Read: “இனி லொகேஷன் சேவை கிடையாது” : Facebook அறிவிப்பால் பயனர்கள் அதிருப்தி - எந்தெந்த சேவைகள் நிறுத்தம் ?