Tamilnadu

கேர்ள் பெஸ்டிகளுடன் Bike Ride.. வேகத்தடையை கவனிக்காததால் விபரீதம்.. விபத்தில் பலியான தோழி!

சென்னையில், வேக தடுப்பை கவனிக்காமல் அதி வேகத்தில் சென்றதால் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளம்பெண் பலி. இருவர் படுகாயம்.

சென்னை விருகம்பாக்கம் தாங்கல் ஏரிக்கரை தெருவைச் சேர்ந்தவர் பிரவீன் (25). திருச்சியைச் சேர்ந்த தமிழரசி (22) திருவண்ணாமலையைச் சேர்ந்த ஐஸ்வர்யா (22) ஆகிய மூவரும் கிளப் ஹவுஸ் என்ற செயலி மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் மூவரும் நண்பர்களாகி உள்ளனர்.

பிரவீனுடைய இருசக்கர வாகனத்தில் தமிழரசி, ஐஸ்வர்யா ஆகிய மூவரும் இன்று அதிகாலை சென்றுள்ளனர். பெண் தோழிகளுடன் மெரினாவை நோக்கி மிக வேகமாக இரு சக்கர வாகனத்தை ஓட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் அடையாறு பாலத்தை அடுத்துள்ள வேகத்தடுப்பை கவனிக்காமல் சென்றதால், கட்டுப்பாட்டை இழந்து மூவரும் தூக்கி வீசப்பட்டு உள்ளனர்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த தமிழரசி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பிரவீன் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் பலத்த காயத்துடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டுப்பாட்டை இழந்த பிரவீனுடைய இருசக்கர வாகனம் முன்னால் சென்றுகொண்டிருந்த குட்டி யானை வாகனத்தின் மீது மோதி அதன் காரணமாக சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு உள்ளது.

விபத்து குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குட்டி யானையை ஓட்டி வந்த ஓட்டுனர் இந்திரனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரவீனும், ஐஸ்வர்யாவும் மயக்க நிலையில் இருப்பதால் அவர்கள் கண் விழித்த பிறகே முழுமையான விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “பசுவை கொன்றதாகக் கூறி பழங்குடியினர் 2 பேர் அடித்துக் கொலை” : மீண்டும் இந்துத்வா கும்பல் வெறிச்செயல்!