Tamilnadu

“நிலக்கரி கையிருப்பில் உள்ளது.. பொய் தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை” : அமைச்சர் எச்சரிக்கை!

இந்தியாவில், பல்வேறு மாநிலங்களில் மின் வெட்டு உள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும்தான் மின்வெட்டு இல்லாமல் சீரான மின் விநியோகம் வழங்க முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கரூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அளித்த பேட்டியில், “நிலக்கரி தட்டுப்பாடு தீர்ந்தது எனச் சொல்ல முடியாது. தேவைக்கு ஏற்ப மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று 17,563 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டது. தேவைக்கு ஏற்ப மாற்று ஏற்பாடுகள் மூலம் சீரான மின் விநியோகம் வழங்கப்படுகிறது.

இப்போதும் கூடுதலாக 500 மெகாவாட் மின்சாரம் கையிருப்பில் உள்ளது. ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் மின் பற்றாக்குறை நிலவுகிறது. இந்தியா முழுவதும் நிலக்கரி பற்றாக்குறை உள்ளது. ஏப்ரல் மே மாதம் சமாளிக்க 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தனியாரிடமிருந்து கொள்முதல் செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 19 நாள்களுக்குத்தான நிலக்கரி கையிருப்பில் உள்ளது. உண்மைக்கு மாறான பொய்யான தகவல்களை பா.ஜ.க மாநிலத் தலைவர் கூறி வருகிறார். இந்தியாவில், பல்வேறு மாநிலங்களில் மின் வெட்டு உள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும்தான் மின் வெட்டு இல்லாமல் சீரான மின் விநியோகம் வழங்க முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். சமூக வலைதளங்களில் மின்துறை குறித்த தவறான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “எதிர்க்கட்சிகள் பொறுப்பு வகிக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஓரவஞ்சனை கிடையாது” : முதலமைச்சர் மடல்!