Tamilnadu

“தாயை அறையில் பூட்டி கொடுமைப்படுத்திய கொடூர மகன்”.. சாதுர்யமாக மீட்ட போலிஸாரை பாராட்டிய காவல் ஆணையர்!

சென்னை கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். இவர் தாய் அமலா மற்றும் தங்கையின் குழந்தையை அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். மேலும் அவர்களை வீட்டின் அறை ஒன்றில் பூட்டிவைத்துள்ளார்.

இந்நிலையில், அமலா காவல்நிலையத்திற்கு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு நடந்தவற்றைத் தெரிவித்துள்ளார். பிறகு கோடம்பாக்கம் தலைமைக் காவலர் பெருமாள், காவலர் செல்வகணேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, சதிஷ்குமார் பூட்டிய அறையை திறக்கமாட்டேன் என போலிஸாரிடம் தகராறு செய்துள்ளார். மேலும் தலைமை காவலரையும் தாக்கியுள்ளார். இருப்பினும் போலிஸார் அவரிடம் பொறுமை காத்து அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தாய் அமலா மற்றும் தங்கையின் குழந்தையை மீட்டனர்.

பின்னர் அமலா மகன் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது பற்றி தகவல் அறிந்த சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், காவலர்கள் பெருமாள், செல்வகணேஷ் ஆகிய இருவரையும் நேரில் அழைத்துப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Also Read: “அரசு பள்ளிகள்தான் நம்முடைய சொத்து”.. மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய DGP : வைரலாகும் வீடியோ!