Tamilnadu
அதிமுக உட்கட்சித் தேர்தலில் அடிதடி.. முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு!
முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன் மற்றும் பா.வளர்மதி முன்னிலையில் நடைபெற்ற அ.தி.மு.க மாவட்ட செயலாளர் தேர்தலில் இருதரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.
அ.தி.மு.க அமைப்பு தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், சென்னை புறநகர் பகுதி மாவட்ட கழக செயலாளர் பதவிக்கு மனுக்களை வழங்கும் நிகழ்வு சென்னை பள்ளிக்கரணையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
பள்ளிக்கரணையில் நடைபெற்ற சென்னை புறநகர் பகுதி மாவட்ட செயலாளர் பதவிக்கு போட்டியிடும் தேர்தலுக்கு முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன் மற்றும் பா.வளர்மதி ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு இருந்தனர்.
இதில் சென்னை புறநகர் பகுதி மாவட்ட கழக செயலாளராகப் பதவி வகித்து வரும் முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.கந்தன் தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் மாவட்ட கழக செயலாளர் பதவிக்கு தனது விருப்ப மனுவை பொறுப்பாளர்களிடம் வழங்கினார்.
இதில் ஒருமனதாக மீண்டும் மாவட்ட செயலாளராக கே.பி.கந்தன் தேர்ந்தெடுப்படுவார் என நிர்வாகிகள் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது முன்னாள் எம்.எல்.ஏ வெங்கட்ராமன், மாநில மாணவரணி துணை செயலாளரும், கோவிலம்பாக்கம் ஊராட்சி மன்ற துணை தலைவருமான மணிமாறன் ஆகியோர் மாவட்ட கழக செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதாக தங்களது விருப்ப மனுவை பொறுப்பாளர்களிடம் வழங்கினார்கள்.
இதைப் பார்த்த மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் ஆதரவாளர்கள் விருப்ப மனுவை அளித்த கோவிலம்பாக்கம் மணிமாறனிடம் ரகளையில் ஈடுபட்டனர்.
ஒருகட்டத்தில் மாவட்ட செயலாளரின் ஆதரவாளர்கள் ஒன்று கூடி மாவட்ட செயலாளர் பதவிக்கு விருப்ப மனு அளித்த மணிமாறனுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி தாக்க முயன்றதால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைகலப்பாக மாறும் சூழலால் பரபரப்பு காணப்பட்டது. அங்கிருந்த தேர்தல் பொறுப்பாளர்கள் இருதரப்பினருக்கு இடையே நடைபெறவிருந்த கோஷ்டி மோதலை தடுத்து நிறுத்தினர்.
இதுதொடர்பாக அக்கட்சி நிர்வாகிகள் சிலர் கூறும்போது நடைபெற்று முடிந்த உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட மாவட்ட செயலாளர் பதவி வகித்து வந்த கே.பி.கந்தன் அவருடைய ஆதரவாளர்களுக்கு சீட் வழங்கியதால் சென்னை புறநகர் பகுதி மாவட்டத்தில் பெரும் அதிருப்தி இருந்து வந்தது.
இந்நிலையில் மீண்டும் மாவட்ட செயலாளராக கே.பி.கந்தன் தேர்ந்தெடுக்கப்பட்டால் அ.தி.மு.கவில் பிளவு ஏற்படும், ஏற்கனவே சிலர் அ.தி.மு.கவிலிருந்து மாற்றுக்கட்சிக்கு சென்ற நிலையில் தொடர்ந்து அ.தி.மு.கவினர் மாற்றுக்கட்சிக்கு செல்லக்கூடிய நிகழ்வுகளும் ஏற்படும் எனவும் தெரிவித்தனர்.
Also Read
-
“நீட் தேர்வு எனும் உயிர்க் கொல்லியை ரத்து செய்ய வேண்டும்!” : தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் வீரமணி!
-
சூழ்ந்த மக்கள்.. செய்தி சேகரித்த பத்திரிகையாளர்.. மிரட்டிய தவெக அமைச்சரின் ஆதரவாளர்.. வைரலாகும் வீடியோ!
-
தொகுதி மறுவரையறை கூட்டம் எதற்காக? ; தவெக அரசை இயக்குவது? : அடுக்காடுக்காக கேள்விகளை எழுப்பிய கனிமொழி MP!
-
ஆபத்தான FCRA சட்டம் : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு கோரிக்கை வைத்த கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
“ஜிஎஸ்டி அமலுக்கு பிறகு மாநிலங்களின் நிதிசார் சுயாட்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது!” : தங்கம் தென்னரசு!