Tamilnadu

நேற்று சென்னை.. இன்று மதுரை.. செல்லூர் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதால் விரைவு ரயில் பயணிகள் தவிப்பு!

டிராக்டர்கள் போக்குவரத்திற்கு பயன்படும் சரக்கு ரயில் கூடல் நகரில் இருந்து மதுரைக்கு பராமரிப்பிற்காக வந்து கொண்டிருந்தது.

அந்த ரயிலின் கடைசி சரக்கு பெட்டியின் ஒரு சக்கரம் மதுரை செல்லூர் அருகே ரயில் பாதையை விட்டு விலகி தடம் புரண்டது.

இதனால் மதுரையில் இருந்து புறப்பட்டு சென்ற குருவாயூர்-சென்னை விரைவு ரயில் மதுரை பாலம் பகுதியில் நிறுத்தப்பட்டது.

பின்பு அந்த ரயில் மதுரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே குருவாயூர் சென்னை விரைவு ரயில் மதுரையில் இருந்து மாலை 3 மணிக்கு மேல் புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், மதுரையிலிருந்து மதியம் மூன்று மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை - சென்னை தேஜாஸ் எக்ஸ்பிரஸ் காலதாமதமாக புறப்படும்.

மேலும் தடம் புரண்ட சரக்கு ரயிலை சரி செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக நேற்று (ஏப்.,24) சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு பணிமனையில் இருந்து வந்த மின்சார ரயில் பிரேக் பிடிக்காததன் காரணமாக நடைமேடை மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதனால் ரயிலின் முதல் பெட்டி பெரிதும் சேதமானது. அதனை 9 மணிநேரமாக போராடி ரயில்வே ஊழியர்கள் மீட்டது குறிப்பிடத்தக்கது.

Also Read: சென்னை ரயில் நிலையத்தில் தடம் புரண்ட மின்சார ரயில்: 9 மணிநேரம் போராடி ரயில் பெட்டிகளை மீட்டது எப்படி?