Tamilnadu

“பா.ஜ.க.வின் ஏஜண்டாக செயல்படுபவர்தான் தமிழக ஆளுநர்” : கி.வீரமணி குற்றச்சாட்டு!

திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு, புதிய கல்வி கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பரப்புரை பயண பொது கூட்டம் தருமபுரியில் மாவட்ட தலைவர் பரமசிவம் தலைமையில் நடைபெற்றது. இதில் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், “இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பல ரூபத்தில் வந்து மக்களை வாட்டி வதைத்தது. அதை விட மிக மோசமான கொடிய நோய் தான் நீட் தேர்வு மற்றும் தேசிய கல்வி கொள்கை என்ற குலதர்ம கல்வி திட்டம். கொரோனா காலத்தில் உறவினர்கள் கூட நோயாளிகளை நெருங்க முடியாமல் யோசித்த நிலையில், நோயால் பாதிக்கபட்ட பொது மக்களை எந்த முதல்வரும் செய்யாத ஒன்றை மருத்துவ மனையில் நேரில் சென்று பார்த்த ஒரே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தான்.

அதேபோல் கொடிய நோயான நீட் மற்றும் தேசிய கல்வி கொள்கையையும் துணிந்து எதிர்த்து போராடுவார். மேலும் சமஸ்கிருதம் படித்தவர்கள் மட்டுமே மருத்துவர் ஆக முடியும் என்ற நிலையை 100 ஆண்டுகளுக்கு முன்னறே ஒழித்து கட்டிய பெருமை திராவிட இயக்கத்தை சாரும். அதனடிப்படையில் தமிழகத்தில் மாவட்டம் தோறும் அனைவரும் படிக்கும் வகையில் மருத்துவ கல்லூரிகள் துவக்கிய பெருமை திராவிட மாடல் ஆட்சியை சாரும்.

திராவிட மாடல் ஆட்சி என்றால் என்ன என கேட்பவர்களுக்கு அனைவரும் படிக்க வேண்டும் என்பது தான் திராவிட மாடல் ஆட்சி ஆகும். குஜராத் முதல்வராக இருந்த மோடி அப்போது நீட் மற்றும் ஜி.எஸ்.டிகளை எதிர்த்தவர். ஆனால் அவர் பிரதமராக வந்த பின்பு எதையெல்லாம் எதிர்த்தாரோ அதையெல்லாம் செய்து வருகிறார். காரணம் அவருடைய பி.டி ஆர்.எஸ்.எஸ் கையில் உள்ளது. தற்போது பா.ஜ.க தமிழகத்தில் காலூன்ற நினைக்கிறது. அதற்கு ஏஜன்டாக செயல்படுபவர் தான் தற்போதைய தமிழக ஆளுநர் என குற்றம் சாட்டினார்.

Also Read: ”மோடியை வைத்து மாயயை உருவாக்கியிருக்கிறார்கள்; அவர் தோற்றுவிட்டார்” - சு.சுவாமி வீசிய வெடி என்ன தெரியுமா?