Tamilnadu

“தமிழ்நாட்டில் போலி சான்றிதழ் மூலம் அரசுப் பணியில் சேர்ந்த வடமாநிலத்தவர்கள்” - விசாரணையில் ‘பகீர்’ தகவல்!

கடந்தாண்டு நடத்தப்பட்ட போட்டித் தேர்வில் தபால் துறை பணிக்கு தேர்வாகிய தமிழ்நாட்டு பணிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களின் பட்டியல், தமிழ்நாடு தபால் துறைக்கு வந்துள்ளது. இதில் வட மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றதாக சான்றிதழ் வழங்கி இருந்தனர்.

மேலும் அச்சான்றிதழில் தமிழக பள்ளிக் கல்வியில் முதல் மொழியாக இந்தியை படித்ததாகவும் குறிப்பிட்டிருந்தனர். இதனால் சந்தேகமடைந்த தபால்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட தேர்வர்களின் பத்தாம் வகுப்பு சான்றிதழை பரிசோதித்தனர்.

மேலும் பத்தாம் வகுப்பு சான்றிதழ்களின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்ய, தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, இதுதொடர்பான சான்றிதழ்களை பள்ளிக்கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, இந்தி மொழி முதல் பாடமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனையடுத்து பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கு வந்தவர்களின் ஏராளமானோர் அளித்துள்ள சான்றிதழ்கள் போலியானது என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை உறுதி செய்துள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து, அரசுத் தேர்வுகள் துறை வழியே, தபால் துறைக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், “தபால்துறை பணிக்கு தேர்வாகி, வட மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் வழங்கியுள்ள, தமிழக 10ஆம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ்கள் போலியானவை.

அவை தமிழ்நாடு தேர்வுத்துறையால் வழங்கப்படவில்லை. தமிழ்நாடு அரசின் முத்திரை, தமிழ்நாடு பள்ளிக் கல்வியின் பெயர் போன்றவற்றை தவறாக பயன்படுத்தி, போலி சான்றிதழ் அளித்தவர்கள்; அதை தயாரித்தவர்கள் மீது, உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “இதெல்லாம் என்னங்க பிரதமர் அவர்களே...” : வாரிசு அரசியலை எதிர்ப்பது இப்படித்தானா?