Tamilnadu

Instaவில் காதல் வலை.. வேறொருவரின் போட்டோவை பயன்படுத்தி 100 பெண்களிடம் பணமோசடி செய்த வாலிபர்: போலிஸ் ஷாக்!

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது புகைப்படத்தை பயன்படுத்தி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மர்ம நபர் ஒருவர் பெண்களுடன் பேசி பழகி வந்துள்ளார். இதுபற்றி அறிந்து பாலாஜி அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதையடுத்து அந்த நபர் யார் என்று விசாரணை செய்தபோது ஆரணி பகுதியில் உள்ள சுபாஷ் தெருவைச் சேர்ந்த பயாஸ் என்பது தெரியவந்தது. பிறகு அவரிடம் பாலாஜி எனது புகைப்படத்தை பயன்படுத்தக்கூடாது என கூறியுள்ளார். அப்போது அவர் பாலாஜியை தாக்கி கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார்.

இதனால் பயாஸ் மீது பாலாஜி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்கு பதிவு செய்து பயாஸை பிடித்து விசாரணை நடத்தியபோது பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் அவரிடம் இருந்த செல்போனை போலிஸார் சோதனை செய்தனர்.

பயாஸ் பாலாஜியின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பயன்படுத்தி 100க்கும் மேற்பட்ட பெண்களிடம் பேசி பழகி வந்துள்ளார். மேலும் பல பெண்ளுக்கு காதல் வலையும் வீசியுள்ளார். அந்தப் பெண்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை வாங்கி மோசடி செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து அவரிடம் ஏமாந்த பெண்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் வேறு நபரின் புகைப்படத்தை கொண்டு 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு காதல் வலை வீசி பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் ஆரணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 1 மணி நேரத்தில் மதுரை to சென்னை.. பறந்து வந்த கல்லீரல்: உடனடி அறுவை சிகிச்சை- அசத்திய அரசு மருத்துவர்கள்!