Tamilnadu

“ஒரு பீடி கேட்டதுக்கு தரல சார்.. அதான் கல்லை தூக்கிப் போட்டு கொன்னுட்டேன்” : போலிஸாரை அதிரவைத்த வாலிபர்!

பீடி கேட்டு கொடுக்காததால் ஆத்திரமடைந்த வாலிபர், முதியவரின் தலையில் கல்லைப் போட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி வில்லியனுார் கண்ணகி பள்ளி ரவுண்டானா பைபாஸ் பகுதியில், நேற்று முன்தினம் அதிகாலை 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர், தலையில் பாறாங்கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார்.

இதுகுறித்து வில்லியனூர் போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் பழைய பேப்பர்களை பொறுக்கி விற்பனை செய்து வந்தவர் எனத் தெரியவந்தது.

இதையடுத்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலிஸார் ஆய்வு செய்தனர். அதன்படி, அந்த முதியவரை வில்லியனூர் புதுநகர் பகுதியை சேர்ந்த தொழிலாளி புண்ணியகோடி (40) என்பவர் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில், அவர் நேற்று முன்தினம் இரவு 12:30 மணியளவில், மது அருந்திவிட்டு வீடு திரும்பும் வழியில், பீடி புகைக்க வேண்டும் என தோன்றியதால், அப்பகுதியில் படுத்திருந்த முதியவரிடம் கேட்டுள்ளார்.

அதற்கு முதியவர் 'என்னிடம் பீடி இல்லை' என கோபமாகக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த புண்ணியகோடி, அருகே கிடந்த சிறிய கல்லை எடுத்து அவர் மீது குத்தியுள்ளார். இதனால் கோபமடைந்த முதியவர் திட்டியுள்ளார்.

இதையடுத்து ஆத்திரமடைந்த புண்ணியகோடி, சாலையோரம் கிடந்த பெரிய பாறாங்கல்லை துாக்கி அவர் தலையில் போட்டுக் கொன்றுள்ளார் எனத் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து புண்ணியகோடியை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Also Read: “பீடி வியாபாரி கே.சி.வீரமணிக்கு 3,000 கோடி சொத்து எப்படி வந்தது?”: அம்பலப்படுத்திய அமைச்சரின் அக்கா மகன்!