Tamilnadu

கலவரத்தை தூண்டும் வகையில் சர்ச்சை பேச்சு.. கன்னியாகுமரி பா.ஜ.க நிர்வாகி கைது - போலிஸ் அதிரடி நடவடிக்கை!

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் நேற்று முன்தினம் பாஜகவின் 42 வது துவக்க விழா பொதுக்கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய இரணியலை சேர்ந்த பா.ஜ.க பிரச்சார அணி தலைவர் ஜெயபிரகாஷ், முன்னாள் முதல்வர் கலைஞர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி உள்ளிட்டோரை தரக்குறைவாக பேசியுள்ளார். இதனை பார்த்து கொண்டிருந்த பொதுமக்கள் முகம் சுழித்தனர்.

மேலும் இதனை தி.மு.க-வை சேர்ந்த சிலர் தட்டி கேட்டனர். பின்னர் சம்பவ இடத்தில் இருந்த போலிஸார் அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். கலைஞர், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை அவதூறாக பேசிய பா.ஜ.க பிரமுகர் மீது தி.மு.க கிழக்கு மாவட்ட பொருளாளர் கேட்சன் ஆரல்வாய்மொழி போலிஸில் புகார் செய்தார்.

புகாரின் பேரில், கலைஞர், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை தரக்குறைவாக பேசிய பா.ஜ.க மாவட்ட பிரச்சார அணி தலைவர் ஜெயபிரகாஷ் மீது, உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி, கலவரம் ஏற்படுத்தும் வகையில் பேசுதல், பெண்களை இழிவு படுத்தும் வகையில் பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

பின்னர் ஆரல்வாய்மொழி போலிஸார், ஜெயபிரகாஷை இரணியலில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்தனர். தகவல் அறிந்த பா.ஜ.கவினர் 200க்கும் மேற்பட்டோர் ஆரல்வாய்மொழி காவல் நிலையம் முன் திரண்டதை தொடர்ந்து ஏராளமான போலிஸார் குவிக்கப்பட்டனர். ஜெயபிரகாஷ் மருத்துவ பரிசோதனை முடிந்து, நாகர்கோவிலில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.

Also Read: மகளின் சிகிச்சைக்காக கடன் வாங்கியவரின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை அபகரித்த பா.ஜ.க நிர்வாகி!