Tamilnadu

பட்டப்பகலில் கொலை முயற்சி; ஓடிச்சென்று தடுத்து நிறுத்திய டிராபிக் போலிஸார்: செம்மஞ்சேரியில் நடந்தது என்ன?

சென்னை செம்மஞ்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குமரன் நகர் பகுதியில் நடை மேம்பாலத்தின் மேல் நடந்து வந்து கொண்டிருந்த பாட்ஷா என்ற நபரை கோழி கார்த்திக், அருண் ஆகிய இரண்டு பேர் முன் விரோதத்தின் காரணமாக கொலை செய்யும் நோக்கத்தோடு தகராறு செய்து கத்தியால் வெட்டியுள்ளனர்.

இதனை கண்ட அவ்வழியாக வாகனத்தில் கடந்து சென்ற செம்மஞ்சேரி போக்குவரத்து ஆய்வாளர் சுகுமார் மற்றும் தலைமை காவலர் பிரகாஷ் ஆகியோர் உடனடியாக வாகனத்தை விட்டு இறங்கிச் சென்று வெட்டிக் கொண்டிருந்த இருவரையும் விரட்டிச் சென்றனர்.

இருப்பினும் காலில் வெட்டுப்பட்ட நிலையில் மயங்கி இருந்த நபரை மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து வந்த செம்மஞ்சேரி போலிஸார் சம்பவத்தில் ஈடுபட்டு தப்பியோடிய நபர்களில் அருண் என்பவரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் கடந்த தீபாவளி அன்று பாட்ஷா என்பவர் கார்த்திக் மற்றும் அருணை வெட்டியதாகவும் அதன் முன் விரோதம் காரணமாக கொலை செய்ய வந்ததாக தெரிவித்துள்ளனர். போக்குவரத்து போலிஸாரின் துரித நடவடிக்கையினால் ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Also Read: கொழுந்துவிட்டு எரிந்த சுற்றுலா பேருந்து.. கோவா சென்ற 37 கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!