Tamilnadu
”செலவுக்கும், குடிக்கிறதுக்கும் காசில்லை..” - டூ வீலரை ஆட்டையப்போட்டு ரூ.1000க்கு விற்ற போதை ஆசாமி!
சென்னையை அடுத்த செங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருடுபோவதாக செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார்கள் வந்தபடி இருந்தன.
இதனை கண்டுபிடிக்க செங்குன்றம் உதவி காவல் ஆணையர் முருகேசன் உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு ஆய்வாளர் புவனேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சம்பவ இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து பைக்கை திருடிய நபரை தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரில் போலிஸார் வாகன தணிக்கையின் போது அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்யப்பட்டிருக்கிறது. அதில் வந்த நபர் ஒருவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டிருக்கிறார்கள்.
போலிஸாரின் விசாரணையில் அவர் பாடியநல்லூர் அண்ணாதெருவை சேர்ந்த உமாபதி (50) என்பதும் இவர் அதே பகுதியில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் மெக்கானிக் வேலை செய்துவருகிறார் எனவும் தெரியவந்தது.
இவரை மேலும் விசாரிக்கும் போது பல திடுக்கிடும் தகவல் வெளிவந்திருக்கிறது. அதன்படி, இந்த உமாபதி கடந்த ஒரு ஆண்டு காலமாக வேலையின்றி சுற்றி திரிந்ததால் செலவுக்கும் குடிப்பதற்கும் பணம் தேவைப்பட்டது. இதனால் மார்க்கெட்டில் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை திருடி அதனை கிராமங்களுக்கு சென்று 1000 ரூபாய்க்கு விற்பனை செய்து அந்த பணத்தை குடிப்பதற்கு செலவு செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர் இவரை கைது செய்து இவரிடமிருந்து 7 இருசக்கர வாகனத்தை மீட்ட செங்குன்றம் குற்றப்பிரிவு போலிஸார் இவர் மீது வழக்குப்பதிவு செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மிக குறுகிய காலத்தில் குற்றவாளியை பிடித்து வாகனத்தை மீட்ட செங்குன்றம் தனிப்படை போலிஸாரை காவல் உயரதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.
Also Read
-
“அச்சுறுத்தல்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு பயப்பட மாட்டார்” : கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படைத்துள்ள “ததும்பும் தமிழ்ப் பெருமிதம்” நூல்!
-
எங்கள் சாதனைகளை நாங்களே விஞ்சும் அளவிற்கு திராவிட மாடல் 2.O அமையும்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
“என்னை நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சந்திக்கலாம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் சிகிச்சை வசதி அமைக்கப்படும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!