Tamilnadu

கஞ்சா விற்றதை போட்டுக் கொடுத்ததால் ஆத்திரம்; ஐகோர்ட் வழக்கறிஞரை சரமாரியாக வெட்டிய மர்ம கும்பல்!

திருவொற்றியூர் எர்ணாவூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ஹரிகுமார் (37). சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக உள்ளார்.

இந்த நிலையில் நேற்று இரவு பணி முடிந்து காரில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். எர்ணாவூர் கண்ணீலால் லே-அவுட் அருகே வரும் பொழுது இவரது காரை ஹெல்மெட் அணிந்து கொண்டு 3 மோட்டார் பைக்கில் வந்தவர்கள் வழிமறித்ததோடு அவரது காரின் மீது சரமாரியாக கற்களை எடுத்து வீசினர்.

உடனே காரில் இருந்து ஹரிகுமார் மற்றும் டிரைவர் குமார் ஆகியோர் வெளியே வந்தனர். அப்போது அந்த கும்பல் ஹரி குமாரை சரமாரியாக வெட்டியது. இதில் நிலைக்குலைந்த ஹரிகுமார் அவர்களிடம் போராடினார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் கூச்சலிட்டபடி அங்கு வந்தனர்.

இதை பார்த்த அந்த மர்ம கும்பல் அங்கிருந்து மோட்டார் பைக்கில் தப்பி ஓடிவிட்டனர். இதில் பலத்த காயமடைந்த ஹரிகுமார் திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கஞ்சா விற்பதை போலிஸுக்கு புகார் கொடுத்ததால் தன்னை அரிவாளால் வெட்டியும், நாட்டு வெடிகுண்டு வீசியும் கொலை செய்ய முயன்றதாக ஹரிகுமார் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் எண்ணூர் போலிஸார் வழக்குப்பதிவு செய்து அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றதாக அதே பகுதியைச் சேர்ந்த ராம்கி உட்பட 6 பேரை போலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Also Read: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் கொலை.. உடலை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய தந்தை!