Tamilnadu

“வயதான தம்பதியை தாக்கி பணம் கேட்டு, கொலை மிரட்டல்” : பா.ஜ.க பிரமுகர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு !

புதுச்சேரியில் பா.ஜ.க பிரமுகர் உள்ளிட்ட மூன்று பேர் மளிகை கடைக்குள் புகுந்து, வயதான தம்பதியை தாக்கி பணம் கேட்டு, கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுதொடர்பான சிசிடிவி காட்டசிகள் தற்போது வெளியாகியுள்ளது.

புதுச்சேரி லாஸ்பேட்டை நாவற்குளம் பகுதியில் மளிகை கடை நடத்தி வருபவர் குமரேசன்(65). இவரது இரண்டாவது மகன் கணேஷ்குமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இதனிடையே கணேஷ்குமார், கருவடிக்குப்பம் பகுதியை சேர்ந்த பா.ஜ.க பிரமுகர் பிரகாஷ் என்பவரிடம் கடன் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.

கணேஷ்குமார் உயிரிழந்த நிலையில், அவருக்கு கடன் கொடுத்த பணத்தை அவருடைய வயதான பெற்றோரிடம் பிரகாஷ் கேட்டு வந்துள்ளார். ஆனால், பணம் இல்லாத காரணத்தினால், குமரேசன் அவகாசம் கேட்டு வந்த நிலையில், நேற்று இரவு பா.ஜ.க பிரமுகர் பிரகாஷ் உட்பட 3 பேர் நாவற்குளம் பகுதியில் குமரேசன் நடத்தி வரும் மளிகை கடைக்குள் புகுந்து, குமரேசன் மற்றும் அவரது மனைவியிடம் கொடுத்த பணத்தை திருப்பித் தரவில்லை என்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டி, அவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பா.ஜ.க பிரமுகர் தம்பதியினரை தாக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இதுகுறித்து லாஸ்பேட்டை காவல்நிலைய போலிசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள பிரகாஷ் உள்ளிட்ட மூன்று பேரை தேடி வருகின்றனர்.

Also Read: “பதவி கொடுக்காத ஆத்திரத்தில் ஆட்சியை முடக்க திட்டமா?” : கூட்டணியில் இருந்து வெளியேறும் பா.ஜ.க!