Tamilnadu

“பதவி கொடுக்காத ஆத்திரத்தில் ஆட்சியை முடக்க திட்டமா?” : கூட்டணியில் இருந்து வெளியேறும் பா.ஜ.க!

புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்தக் கூட்டணியில் ஆரம்பம் முதலே அமைச்சர் பதவிகளை பங்கிட்டுக் கொள்வதில் தொடங்கி பல்வேறு விஷயங்களில் எதிரும் புதிருமாகவே செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது பா.ஜ.க மற்றும் பா.ஜ.க ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்காததால், என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான ரங்கசாமி மீது பா.ஜ.க-வினர் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோல் பா.ஜ.க அமைச்சர்களின் தன்னிச்சையான செயல்பாடு, ஒன்றிய அரசிடமிருந்து பா.ஜ.க அமைச்சர்கள் புதுச்சேரிக்கு நிதி பெற்றுத் தராதது உள்ளிட்ட காரணங்களால் முதல்வர் ரங்கசாமியும் பா.ஜ.க மீது கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த இரு கட்சிகளுக்கும் இடையேயான மோதல் தற்போது உள்ளாட்சி தேர்தல் மூலம் வெட்டவெளிச்சமாகியுள்ளது.

அண்மையில் நடைபெற்ற பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில், என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறி, உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டுமென பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒட்டுமொத்த நிர்வாகிகளும் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனை உறுதிப்படுத்தும் விதமான வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் புதுச்சேரி மாநில தலைவர் சாமிநாதன் அறிவித்துள்ளார்.

Also Read: பார்சல் மட்டுமே தந்ததால் தகராறு.. கடைக்காரரை துப்பாக்கியால் சுட்ட நபர் - ஒருவர் பலி : கேரளாவில் பயங்கரம்!