Tamilnadu
“24 மணி நேரத்திற்குள் மன்னிப்புக் கோர வேண்டும்” : அண்ணாமலைக்கு ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தமிழ்நாட்டை வளர்த்தெடுக்கும் வகையில் துபாய் எக்ஸ்போ-22ல் கலந்துகொண்டதை கொச்சைப்படுத்தி, உள்நோக்கம் கற்பிக்கும் வகையில் பேசிய தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மீது தி.மு.கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் எம்.பி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் துபாய் பயணம் குறித்து அவதூறு பரப்பிய பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை 24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கோர வேண்டும், இல்லையென்றால் 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எச்சரித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் துபாய் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு துபாய் தொழில் கண்காட்சியில் கலந்து கொண்டுள்ள அவர் முதலீட்டாளர்களை சந்தித்து வருகிறார். முதல்வரின் இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
ஆனால் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தமிழக முதலமைச்சரின் துபாய் பயணத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டுள்ள துபாய் பயணம் தமிழர்களின் நிதியை பெருக்குவதற்காக அல்ல, தனது குடும்பத்தை பெருக்குவதற்காக, தனது குடும்ப நிதியை பெருக்குவதற்காக என்று விமர்சித்துள்ளார்.
இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் ஆகியோர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய ஆர்.எஸ்பாரதி, “தமிழக வளர்ச்சிக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டுள்ள அரசு முறை துபாய் பயணத்தை கொச்சைப்படுத்தும் விதமாக அண்ணாமலை அவதூறு கருத்து பரப்பியுள்ளார்.
தனது கருத்துக்கு அண்ணாமலை அடுத்த 24 மணி நேரத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லையென்றால் அவர் மீது கிரிமினல் நடவடிக்கை மற்றும் 100 கோடி ரூபாய் அபராதம் கேட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என ஆர்.எஸ் பாரதி எச்சரித்தார்.
மேலும், பொய் மட்டுமே பேசி தனது அரசியல் பயணத்தை அண்ணாமலை மேற்கொண்டுள்ளதாகவும், இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சராக செயலாற்றி வரும் மு.க.ஸ்டாலின் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக அண்ணாமலை பொய் கருத்துக்களை பரப்பி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், அரசுப் பயணத்தை சொந்த முதலீடு செய்ய பயணம் மேற்கொண்டுள்ளதாக குற்றம்சாட்டும் அண்ணாமலை, பிரதமர் மோடி 64 முறை வெளிநாடுகளுக்கு மேற்கொண்ட பயணத்தையும் சொந்த முதலீடு செய்வதற்கான பயணம் என்றுதான் கூறுவாரா என கேள்வி எழுப்பினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இழிவாகப் பேசியதற்கு கண்டனம் தெரிவித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளோம், அண்ணாமலை மன்னிப்பு கேட்காவிட்டால் தி.மு.க சார்பில் எடுக்கப்படும் சட்ட போராட்டத்தை அவரால் தாங்க முடியாது எனவும் ஆர்.எஸ்.பாரதி எச்சரித்துள்ளார்.
Also Read
-
உணவக உரிமையாளரை தாக்கிய பா.ஜ.க நிர்வாகி கைது : போலிஸ் அதிரடி
-
போலிஸ் பாதுகாப்பிற்கு ஆசைப்பட்டுப் பொய் புகார் : வசமாகச் சிக்கிய இந்து முன்னணி நிர்வாகி!
-
”மதத்தை வைத்து மக்களை திசை திருப்பப் பார்க்கும் மோடி” : பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!
-
”மணிப்பூரில் ஓராண்டாக அமைதியைக் கொண்டுவர மறுத்து விட்ட பா.ஜ.க” : ப.சிதம்பரம்!
-
இன்றுடன் ஓராண்டாக நீடிக்கும் மணிப்பூர் வன்முறை : வேடிக்கை பார்க்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு!