Tamilnadu

ஆன்லைன் மூலம் கடன் பெற்ற பெண்ணிடம் கூடுதல் வட்டி கேட்டு மிரட்டல் - மோசடி கும்பலை தட்டித் தூக்கிய போலிஸ்!

கோவை மாவட்டம், செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுவாதி. இவர் ஆன்லைன் கடன் வழங்கும் செயலியின் மூலம் கடன் பெற்றுள்ளார். இதற்கான வட்டித் தொகையையும் முறையாகச் செலுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், கடன் பெற்ற செயலியின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து பேசுவதாகக் கூறி 2 பேர் அவரிடம் பேசியுள்ளனர். அப்போது அவர்கள், 'நீங்கள் வட்டி தொகையை முறையாகச் செலுத்தவில்லை' என கூறியுள்ளனர். இதற்குச் சுவாதி, 'தான் முறையாக வட்டி செலுத்திவருவதாகவும், இதற்கான தகவல்கள் எண்ணிடம் சரியாக இருக்கிறது' எனவும் கூறியுள்ளார்.

ஆனால், இதை ஏற்க மறுத்த அவர்கள், 'உங்கள் பெயரை மோசடியாளர்கள் பட்டியலில் சேர்த்துவிடுவோம்' என மிரட்டியுள்ளனர். இதையடுத்து சுவாதி சம்மந்தப்பட்ட செயலியின் மேலாளர் அர்ஷியா அப்ரின், துணை மேலாளர் ரஷ்மான் ஷெரீப் ஆகியோருக்கு புகார் தெரிவித்துள்ளார். இவர்களும் பணத்தை செலுத்தும்படி அவரை மிரட்டியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த சுவாதி இது குறித்து கோவை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், போலிஸார் பெங்களூரு சென்று அர்ஷியா அப்ரின், ரஷ்மான் ஷெரீப் மற்றும் சேவை மையத்திலிருந்து பேசிய யாசின் பாஷா, பர்வீன் ஆகிய 4 பேரை போலிஸார் கைது செய்து கோவை அழைத்துவந்து வந்தனர்.

இந்த கும்பல் சுவாதியைப் போன்று வேறு யார் யாரிடம் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டுள்ளது என்பது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடன் பெறுவதற்காகச் செயலியை உருவாக்கிய சன்னி என்பவரை போலிஸார் தேடிவருகிறனர்.

Also Read: சிறுமியை கடத்தி சில்மிஷம்: வாலிபருக்கு 7 ஆண்டு சிறை; ரூ.20,000 அபராதம்; மீறினால் மேலும் 6 மாதம் ஜெயில்!