Tamilnadu

அரசு வேலைக்கு ஆசை.. தந்தைக்கு மகன் செய்த கொடூரம் - விசாரணையில் வெளிவந்த உண்மை : நடந்தது என்ன?

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் திடீர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா. இவர் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக கீரனூர் பேரூராட்சி அலுவலகத்தில் துப்பரவு பணியாளராக இருந்து வந்தார்.

இவர் இந்த மாதம் பணி ஓய்வு பெற இருந்தநிலையில் கடந்த 18ம் தேதி பேரூராட்சி அலுவலகம் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மேலும், கருப்பையாவின் உடற்கூறு ஆய்வு அறிக்கையில் அவரது உடலில் விஷம் கலந்து இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலிஸார் அவரது மகன் பழனியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதில், தந்தையின் அரசு வேலைக்கு ஆசைப்பட்டுப் பணி ஓய்வு பெறுவதற்கு முன்பே கொலை செய்வது என பழனி திட்டமிட்டுள்ளார். இதன்படி பழனி மற்றும் அவரது நண்பர் ஆனந்தன் ஆகியோர் மதுவில் விஷம் கலந்து கருப்பையாவுக்குக் கொடுத்துள்ளனர்.

இதை குடித்த அவர் உயிருக்கு போராடிய நிலையில் அவரது நெஞ்சின் மீது ஏறி மிதித்து இருவரும் கொலை செய்துள்ளதது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலிஸார் பழனி மற்றும் அவரது நண்பர் ஆனந்தன் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ஆன்லைன் மூலம் கடன் பெற்ற பெண்ணிடம் கூடுதல் வட்டி கேட்டு மிரட்டல் - மோசடி கும்பலை தட்டித் தூக்கிய போலிஸ்!