Tamilnadu

பைக் ரேஸ் செய்து அட்டூழியம்.. இளசுகளின் கொட்டத்தை அடக்கி சென்னை போலிஸார் அதிரடி நடவடிக்கை!

சென்னையில் கடந்த 4 நாட்களில் இருசக்கர வாகனங்களை அபாயகரமாக ஓட்டி சாகசம் செய்த 14 பேர் கைது. 3 இளஞ்சிறார்கள் பிடிபட்டனர். மேலும் 14 பேர் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்பட்டு 18 விலையுயர்ந்த இருசக்கர வாகனங்களை சென்னை போலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாகவும், அபாயகரமாகவும் பைக் ரேஸ் என்ற பெயரில் ஆபத்தான முறையில் வாகனங்களை ஓட்டி சாகசத்தில் ஈடுபட்டர்களை விரைந்து கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டதார்.

அதன் பேரில், போக்குவரத்து போலிஸாருடன் இணைந்து, சட்டம் & ஒழுங்கு காவல் ஆய்வாளர்கள் மற்றும் ஆயுதப்படைக் காவலர்கள் அடங்கிய காவல் குழுவினர் நேப்பியர் பாலம் முதல் அடையார் திரு.வி.க. பாலம் வரை, ராதாகிருஷ்ணன் சாலை, வண்ணாரப்பேட்டை மின்ட் மற்றும் வியாசர்பாடி, அம்பேத்கர் சாலை போன்ற முக்கிய சாலைகளில் தீவிரமாக கண்காணித்து, பைக் ரேஸில் ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, கடந்த மார்ச் 19ம் தேதி நள்ளிரவு மெரினா ராதாகிருஷ்ணன் சாலையில் இளைஞர்கள் சிலர் அபாயகரமான முறையில் தங்களது இருசக்கர வாகனங்களை ஓட்டி சாகசத்தில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின்பேரில், அடையார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்றபோது, இளைஞர்கள் தப்பிச் சென்றுள்ளனர். பின்னர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து தீவிர விசாரணை செய்ததில், முகேஷ்(20) , ரோமன் அல்கிரேட் (23) , ஹரிகரன், (21) , முகமது சாதிக்(20) , முகமது ரகமத்துல்லா (20) , முகமது ஆசிப் (19) ஆகிய 6 பேரை கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். மேலும் பைக் ரேஸில் ஈடுபட்ட 2 இளஞ்சிறார்களை பிடித்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர். அவர்களிடமிருந்து விலையுயர்ந்த 1 கே.டி.எம், 4 யமஹா, 1 ஆக்டிவா என மொத்தம் 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கடந்த மார்ச் 20ம் தேதி ஸ்டான்லி ரவுண்டானா முதல் மூலக்கொத்தளம் சிக்னல், பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது, அங்கு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், அபாயகரமாக இருசக்கர வாகனங்களை இயக்கி சாகசம் செய்த அஜித்குமார் (21), பிரவீன்குமார் (23) , சதாம் உசேன் (22) , ஆகிய மூவரை கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். மேலும் 16 வயதுடைய இளஞ்சிறாரை பிடித்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர். அவர்களிடமிருந்த 2 விலையுயர்ந்த இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல, புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று முன் தினம் (மார்ச் 21) வியாசர்பாடி, அம்பேத்கர் கல்லூரி சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்த பாலாஜி (20) , ஹரீஸ் குமார் (22) , மோவின் (20) , சல்மான் (19) , டிவின்குமார் (20) ஆகிய 5 நபர்களை கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து 3 விலையுயர்ந்த இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இராயப்பேட்டை போக்குவரத்து காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கடந்த மார்ச் 20 அன்று ஆர்.கே.சாலை & டாக்டர் நடேசன் சாலை சந்திப்பில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது, பைக்கில் சாகசம் செய்த கிருஷ்ணன் (19) , பவன் (22) , விக்னேஷ் (19) , சந்தோஷ் (20) , கோபி (21) ஆல்வின் (21) , தமிழரசன் (19) , ஆகிய 7 நபர்களை பிடித்து மோட்டார் வாகன சட்டத்தின் படி வழக்குப்பதிவு செய்து 7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.7,500/- அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுடன் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த 7 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து ரூ.1,400/- அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும் மேற்படி நபர்களின் பெற்றோர்களை நேரில் வரவழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, மீண்டும் இது போன்று பைக் சாகசத்தில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Also Read: சட்டத்தை மீறி பைக் சாகசம் செய்த இளைஞர்கள்.. சாட்டையை சுழற்றிய போலிஸார் - பின்னணி என்ன?