Tamilnadu

137 நாட்களுக்குப் பிறகு உயர்ந்த பெட்ரோல் விலை.. சிலிண்டர் விலையும் ரூ.50 உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி!

ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே வரலாறு காணாத வகையில் பெட்ரோல் விலை உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் பல மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ. 100ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த பிறகு வாட் வரியை ஒன்றிய அரசு குறைத்தது. இதனால் பெட்ரோல் டீசல் விலை சற்று குறைந்தது. இதையடுத்து உத்தர பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகாண்ட ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றதால் 5 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை உயராமல் இருந்தது. இந்நிலையில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் மக்களை உறுப்பினர் ராகுல் காந்தி, தேர்தல் முடிந்துவிட்டது பெட்ரோல், டீசல் விலை உயரக்கூடும் என ஒன்றிய அரசை விமர்சித்திருந்தார். பொது மக்களும் எப்போது விலை உயரக்கூடும் என்ற அச்சத்திலேயே இருந்துவந்தனர்.

இதையடுத்து 137 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது.சென்னையில் பெட்ரோல் விலை 76 காசுகள் அதிகரித்து 102.16 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 77 காசுகள் உயர்ந்து 92.65 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும்,வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. சிலிண்டருக்கு 50 ரூபாய் உயர்ந்து 967.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இப்படி ஒரே நாளில் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

Also Read: பெட்ரோல் விலையை கட்டுப்படுத்த ஒன்றிய அரசிடம் என்ன திட்டம் உள்ளது? : மக்களவையில் தி.மு.க MP சரமாரி கேள்வி!