Tamilnadu

ரயில் தண்டவாளத்தில் வாலிபர் சடலம் கிடப்பதாக வந்த தகவல்.. மீட்கச்சென்ற போலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

கரூர் மாவட்டம், புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மேகவண்ணன். இவர் சென்னையிலிருந்து ரயில் மூலம் தனது ஊருக்குச் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஓட்டகோவில் ரயில் நிலையம் அருகே வந்தபோது ஓடும் ரயிலிலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த வழியாக வந்த சிலர் ரயில் அடிபட்ட ஒருவர் இறந்து கிடப்பதாக போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் அரியலூர் நகர காவல் நிலைய போலிஸார் சுகுமார், ராமச்சந்திரன் ஆகியோர் காட்டுப்பகுதிக்குச் சென்றனர்.

அப்போது ரயிலிலிருந்து கீழே விழுந்த நபர் உயிருடன் இருப்பது தெரியவந்தது. உடனே ஆம்புலன்சிற்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் இரண்டு போலிஸாரும் சேர்ந்து அந்த நபரை 2 கிலோமீட்டர் தூரம் தூக்கிச் சென்று அவர்கள் வரவழைத்த ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தற்போது, மேகவண்ணனுக்கு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைந்து செயல்பட்டு வாலிபரின் உயிரை காப்பாற்றிய இரண்டு போலிஸாருக்கும் அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Also Read: தவறான நண்பர்களுடன் Instagram-ல் பழக்கம்.. பள்ளி சிறுமிக்கு சேர்ந்த கொடூரம்!