Tamilnadu

“சிறுமியிடம் அத்துமீறிய 103 வயது முதியவருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை”: நீதிமன்றம் அதிரடி!

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பத்தை சேர்ந்தவர் பரசுராமன் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஆவார். கடந்த 2018 ஆம் ஆண்டு ஜீலை 9 ந் தேதி அவரது வீட்டில் வாடகை வசித்து வந்த 5 ஆம் வகுப்பு படித்து வந்த 10 வயது சிறுமியை சாக்லெட் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி தனியாக அழைத்துச் சென்று சிறுமியிடம் தொல்லையில் ஈடுபட்டுள்ளார்.

அதன் பிறகு சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே பெற்றோருக்கு விவரம் தெரிந்துள்ளது. இதனையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் இது தொடர்பாக ஆவடி மகளிர் காவல் நிலையத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர் மீது புகார் அளித்திருந்த நிலையில், அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து மத்திய புழல் சிறையில் அடைத்திருந்தனர்.

கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணையில், திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டதால் நீதிபதி, அவருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் 45 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அதனைத் தொடர்ந்து மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறுமி குடும்பத்திற்கு இழப்பீடாக 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொடுக்க கோரி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட 103 வயதைக் கடந்த ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு இத்தண்டனை வழங்கப்பட்டிருப்பது சிறுமிகள் மீதான குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு இத்தீர்ப்பு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

Also Read: “நேருக்கு நேர் மோதிய வாகனங்கள்.. அதிவேகத்தால் பறிபோன 3 உயிர்கள்” : உடலை மீட்க போராடிய ஊர்மக்கள்!