Tamilnadu

“நேருக்கு நேர் மோதிய வாகனங்கள்.. அதிவேகத்தால் பறிபோன 3 உயிர்கள்” : உடலை மீட்க போராடிய ஊர்மக்கள்!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் அரசு மருத்துவமனை அருகே தனியார் பள்ளிக்கூடம் உள்ளது. இதன் முன்பு ராஜபாளையம் தனியார் கல்லூரி மாணவிகளை ஏற்றி சென்ற பேருந்து சென்று கொண்டிருக்கும் பொழுது எதிரே ஒரு கார் மற்றொரு வாகனத்தை தாண்டி வேகமாக வந்து கல்லூரி பேருந்து முன்பு மோதியது.

இதில் காரில் பயணம் செய்த டிரைவர் முத்துக்குமார் வயசு 46, திருச்சி திருப்பராய்த்துறையில் சேர்ந்தவர், அவரது மனைவி ராஜேஸ்வரி வயது 37, மற்றும் பெரியக்காள் வயது 62 என்ற மூதாட்டி மூவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். தகவல் கிடைத்தவுடன் விருதுநகர் மாவட்ட காவல்துறை கூடுதல் எஸ்.பி மணிவண்ணன், மற்றும் ராஜபாளையம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன், மற்றும் தெற்கு போலிஸார் விரைந்து வந்து பிரேதங்களை மீட்டனர்.

ராஜபாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயராமன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து காரின் பாகங்களை உடைத்து பிரேதங்களை மீட்டனர். விபத்து காரணமாக ராஜபாளையம் தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் தேங்கி நின்றன. இதன் காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு பின்னர் வாகனங்கள் போக்குவரத்து சரி செய்யப்பட்டு மீண்டும் இயங்கத் தொடங்கின.

கல்லூரிப் பேருந்தின் ஓட்டுநர் ராமசாமி வயது 62 என்பவருக்கு கால்கள் சேதமடைந்து இடுப்பு பகுதியில் பலத்த அடிபட்டது. ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணையை துரிதப்படுத்தினார்.

Also Read: ஜெராக்ஸ் மிஷின், ஸ்கேனிங் மிஷின் வைத்து கள்ளநோட்டு தயாரித்த கும்பல்: மேலும் 4 பேரை மடக்கி பிடித்த போலிஸ்!