Tamilnadu

ப்ளீஸ் சார் போகாதீங்க.. கற்றுக்கொடுத்த ஆங்கிலப் பாடலை பாடி ஆசிரியருக்கு பிரியாவிடை - நெகிழ்ச்சி சம்பவம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ளது வடதொரசலூர் கிராமம். இங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில பாட ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ஆனந்த கண்ணன். இவர் மாணவ மாணவிகளுக்காக தொழில்நுட்பத்துடன் இணைந்த கல்வி முறையின் மூலம் ஆங்கிலத்தை மிக எளிமையாக நடத்தி வந்துள்ளார்.

மேலும் கிராமத்திலிருந்து வரும் மாணவ மாணவிகளும் எளிமையாக ஆங்கிலம் பேச முடியும் என்ற நம்பிக்கையை அவர்களிடம் ஏற்படுத்தி அவர்களை சரளமாக உரையாடவும் வைத்துள்ளார். இந்நிலையில், நேற்று அவருக்கு பணி மாறுதல் ஆணை வந்தது இதனால் அங்கிருந்து வேறு வழியில்லாமல் அடுத்த பள்ளிக்கு செல்ல தயாராக இருந்தார்.

இதையறிந்த அப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு விடாமல் செல்ல வேண்டாம் என்று அழுதுகொண்டே கோரிக்கை வைத்தனர். உடனடியாக அங்கு வந்த கல்வி அதிகாரிகள் ஆசிரியர் பணி மாறுதலில் செல்வதால் உங்களைப் போன்ற அந்தப் பள்ளி மாணவர்களும் பயனடைய வேண்டும். எனவே அவரை அனுமதியுங்கள் என்று கோரிக்கை வைத்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட மாணவ - மாணவியர்கள் இறுதியாக அவர் எளிதாக ஆங்கிலம் படிக்கும் வகையில், சொல்லிக்கொடுத்த ஆங்கிலப் பாடலை கண்ணீருடன் பாடினார்கள் இந்த சம்பவம் அந்தப் பள்ளியை மட்டுமல்லாது அந்த கிராமத்தையே நெகிழச் செய்துள்ளது.

மேலும் இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. வடதொரசலூர் உயர்நிலைப் பள்ளியில் 2017 முதல் ஐந்து வருடங்களாக பணிபுரிந்து வரும் ஆனந்த கண்ணன் தமிழக அரசின் மாநில அளவில் கனவு ஆசிரியர் விருது மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது களை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ‘நீங்கள் யார் பக்கம்..?’ - ரஷ்ய விவகாரத்தில் இந்தியாவிற்கு நெருக்கடி கொடுக்கும் அமெரிக்கா !