Tamilnadu

திருவண்ணாமலையில் அரசு நிகழ்ச்சி.. சென்னையில் இருந்து பாதி தூரத்தை ஓடியே கவர் செய்த அமைச்சர் மா.சு!

தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் பெரும்பாலான அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆரோக்கியத்தை பேணி பாதுகாப்பதில் முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.

அவ்வகையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருப்பவர் மா.சுப்பிரமணியன். எத்தனை எத்தனை வேலையாக இருந்தாலும் உடல் ஆரோக்கியத்தில் சமரசம் செய்துக்கொள்ளாதவர்களில் மா.சுப்பிரமணியனும் இணைவார்.

கொரோனா ஊரடங்கின் போது கூட வீடியோ கால் வழியாக வீட்டின் மொட்டை மாடியில் இருந்தபடியே பற்பல மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார்.

மேலும், தான் செல்லுமிடங்களிலெல்லாம் மக்களுக்கு உடற்பயிற்சி குறித்து தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தவறியதில்லை.

இப்படி இருக்கையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து அதிகாலை ஐந்து மணிக்கே கிளம்பிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுமார் ஒன்றரை மணிநேரத்திற்கு நெடுஞ்சாலை வழியாக ஓடியே சென்றுள்ளார். மீதி தொலைவை காரில் சென்று கடந்திருக்கிறார்.

அது தொடர்பான புகைப்படங்களையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவரது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அதனை கண்ட பலரும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: ”திராவிடத்தின் நிலைத்த புகழ் சான்று சென்னை ’அண்ணா மேம்பாலம்’ ”- The Times of India ஏடு சிறப்புக் கட்டுரை!